'அதிமுகவுக்கு அபாய சங்கு.. அதான் நான் ஏற்கல பங்கு'..! சகட்டுமேனிக்கு கலாய்த்த டி.ஆர்..!

By Manikandan S R SFirst Published Jan 3, 2020, 5:20 PM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு அபாய சங்கு என்றும் அதனால் தான் அதில் தான் ஏற்கவில்லை பங்கு என தனக்கே உரிய பாணியில் டி.ராஜேந்திரர் தெரிவித்தார்.

நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு நாட்களிலும் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குப் பதிவுக்குப் பிறகு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் இருந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இரவு முழுவதும் இடைவிடாமல் நீடித்த வாக்கு எண்ணிக்கை தற்போது வரை நடந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஆளும் அதிமுகவிற்கு உள்ளாட்சித்தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அதிமுகவிற்கு கிடைத்திருக்கும் தோல்வி குறித்து நடிகரும் லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு அபாய சங்கு என்றும் அதனால் தான் அதில் தான் ஏற்கவில்லை பங்கு என தனக்கே உரிய பாணியில் டி.ராஜேந்திரர் தெரிவித்தார்.

உள்ளாட்சித்தேர்தலில் தனது கட்சி தொண்டர்களும் போட்டியிட விரும்பியதாகவும் ஆனால் தான் ஓட்டு கேட்டு வர முடியாது என அவர்களிடம் கூறியதாக தெரிவித்திருக்கிறார். இருப்பினும் பணம் கொடுக்காமலேயே தனது கட்சியைச் சேர்ந்த ஒருவர் தேர்தலில் மூன்றாம் இடம் பெற்றிருப்பதாக கூறினார். ரஜினி மற்றும் கமல் இருவருமே தேர்தலில் போட்டியிடுவது பற்றி யோசிக்கும் நிலையில் தானும் யோசித்து தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

click me!