டி.ராஜேந்தர் முடிவால் அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்..! அதுவும் வேண்டாம் இதுவும் வேண்டாம்... அதிரடி!

By manimegalai aFirst Published Mar 27, 2021, 12:21 PM IST
Highlights

இந்நிலையில் தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர், அரசியல் தலைவர் என பல்வேறு திரையிலும் தனி முத்திரை பதித்த, டி.ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டு, வருகிற தேர்தலில் இலட்சிய திமுக யாரையும் ஆதரிக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.
 

சட்டமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடித்து வருகிறது. சிறிய கட்சிகள் தங்களுடைய ஆதரவு யாருக்கு என்பதையும் தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் கார்த்தி, பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி, குஷ்புவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர், அரசியல் தலைவர் என பல்வேறு திரையிலும் தனி முத்திரை பதித்த, டி.ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டு, வருகிற தேர்தலில் இலட்சிய திமுக யாரையும் ஆதரிக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது...  "மறைந்த முன்னாள் முதல்வர், அம்மா காலத்தில் இருந்து தொடங்கி இந்நாள் துணை முதல்வர் அண்ணா திமுகவின் ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு திரு ஓ.பி.எஸ். ஐயா அவர்கள் என் நீண்டநாள் நண்பர் அவர்கள்.

நடைபெறும் இந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்குவதற்கு முன்பு மாண்புமிகு ஓ.பி.எஸ் ஐயா அவர்கள், என்னை அழைத்தார், சென்றேன்.  மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கையில் பூங்கொத்து ஒன்றை தந்தேன்... கண்ணியமாய் விடைபெற்று வந்தேன்.

மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் இல்லாமல், அண்ணா திமுக சந்திக்கின்ற முதல் சட்டமன்ற தேர்தல் களம். அதைப்போல் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் இல்லாமல் திமுக சந்திக்கின்ற முதல் சட்டமன்ற தேர்தல் களம்.... இரண்டு கட்சிகளுக்கும் கட்சிகளுக்குமே இருக்கிறது அவரவர் பலம்.  இதை தவிர கூட்டணி என்று சேர்ந்திருக்கிறார்கள் பக்கபலம்.  அதைத் தவிர அவர்கள் இடத்தில் இருக்கிறது பலபலம்.  இரண்டு கட்சிகளுமே பார்த்துக் கொள்ளப் போகிறது பலப்பரிட்சை. இதில் நான் போய் என்ன செய்யப்போகிறேன் புது சிகிச்சை.

ஒருவருடைய வாக்குவன்மை அவர் வார்த்தையில் இருக்கும். தன்மை அதில் வெளிப்படும் உண்மை அதற்கு ஒரு சக்தி இருக்கிறது. என்று சில முன்னாள் முதல்வர்கள் நம்பினார்கள். அதன்படி அடிப்படையில் என்னை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தார்கள், அது ஒரு காலம். கொள்கையை சொல்லி ஓட்டு கேட்டதெல்லாம் அந்த காலம், கொடுக்க வேண்டியதை கொடுத்து ஓட்டு வாங்கி கொள்ளலாம் என்பது இந்தக் காலம். காலமும் சரியில்லை, கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.

பத்தாததுக்கு இது கொரோனா காலம் பாதுகாப்பு வேண்டுமென்றால் அணிந்து கொள்ள வேண்டும் முகமூடி. பக்குவப்பட்ட வாழ வேண்டும் என்றால் அமைதி காக்க வேண்டும் வாய் மூடி. இந்த சட்டமன்ற தேர்தலில் எங்கள் இலட்சிய திமுக நாங்கள் யாரையும் ஆதரிக்கவில்லை. அரவணைக்கவும் இல்லை. நடுநிலைமையோடு இருக்க விரும்புகிறோம்.

நாடும் நாட்டு மக்களும் நல்லா இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்... இப்படிக்கு டி ராஜேந்திரன் எனகூறி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார். டி.ராஜேந்தர் ஏதேனும் கட்சிக்கு ஆதரவு கொடுத்தால், அதன் மூலம் சில பல ஓட்டுகள் அந்த கட்சிக்கு கிடைக்க வாய்ப்பிருக்கும் நிலையில்... யாருக்குமே ஆதரவு இல்லை என இவர் கூறியுள்ளது அரசியல் கட்சி தலைவர்களை அதிர வைத்துள்ளது.

click me!