சூர்யாவின் 'சூரரை போற்று' படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல்..! தடை கூற கோரி வழக்கு..!

By manimegalai aFirst Published Sep 16, 2020, 11:55 AM IST
Highlights

சூர்யா நடித்துள்ள சூரரை போற்று திரைப்படம் அக்டோபர் மாதம் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாக, ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சூர்யா நடித்துள்ள சூரரை போற்று திரைப்படம் அக்டோபர் மாதம் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாக, ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா, கடந்த 2  வருடங்களுக்கு மேலாக ஒரு வெற்றி படத்தை கொடுக்க படாத பாடு பட்டு வருகிறார். இவருக்கு வெற்றியை தரும் என நம்பிய, காப்பான், மற்றும் NGK ஆகிய படங்கள் படுதோல்வியை தழுவியது. இந்நிலையில் தற்போது இவர் நம்பி இருக்கும் திரைப்படம் சூரரை போற்று.

கொரோனா பிரச்சனை இல்லை என்றால் இந்நேரம் வெளியாகி இருக்க வேண்டிய இந்த படம், கொரோனா தொற்றின் காரணமாக வெளியாகாமல் முடங்கியுள்ளது. இந்நிலயில் நடிகர் சூர்யா, ஒரு நடிகராக இந்த விஷயத்தை அணுகுவதை விட, தயாரிப்பாளராக முடிவெடுப்பதாக கூறி, 'சூரரை போற்று' திரைப்படம் ஓடிடியில் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என தெரிவித்தார்.

இவரின் இந்த முடிவுக்கு தற்போது வரை, திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்தாலும், அதனை கொஞ்சும் கூட கண்டு கொள்ளாமல் தன்னுடைய முடிவில் உறுதியாக உள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் மூலம் புதிய பிரச்சனை எழுந்துள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள, மண் உருண்ட மேல, மனுச பய ஆட்டம் பாரு என்கிற பாடலில், "கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

இது அணைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் பிரச்னை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாகவும் எனவே, 2022 வரை படத்துக்கு தடை விதிக்க கோரி தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!