தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் ஜூன் 4 ஆம் தேதியும், கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதியும் தொடங்கும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த பருவமழை இயல்பான அளவில் மழையைத் தரும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் கொரோனா இன்னொரு பக்கம் கோடைக்காலம் என தொடர்ந்து பெரும் அவதிக்குள்ளாகி இருக்கும் இந்த தருணத்தில் மனதிற்கு ஆறுதல் தரும் விஷயமாக விரைவில் தென்மேற்கு மழை தொடங்க உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்ற வாரம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரளவிற்கு மழை பெய்தது.
சென்னையை பொறுத்தவரை பல பகுதிகளில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது
அதன் படி, தற்போது சென்னை பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர், அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களிலும், சின்னமலை, கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம், பூந்தமல்லி, பொன்னேரி, செங்குன்றம், புழல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது
கோடைக்காலம் தொடங்கிய நாள் முதலே பெரிய அளவில் எந்த பகுதியிலும் மழை இல்லாமல் இருந்தது. கடந்த பல நாட்களாக கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலையில் கோடை வெயில் ஏற்படுத்திய வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் மழை குளிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் ஜூன் 4ஆம் தேதியும், கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதியும் தொடங்கும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது