அப்பாவிற்கு கொரோனா தொற்று குணமாகவில்லை... வதந்திகளை நம்ப வேண்டாம் என எஸ்.பி.பி.சரண் வீடியோ வெளியீடு...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 24, 2020, 12:52 PM IST
Highlights

ஆனால் எஸ்.பி.பி-க்கு கொரோனா தொற்று குணமாகிவிட்டதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என எஸ்.பி.பி.சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த 14ம் தேதி முதலே கவலைக்கிடமானது.  இதையடுத்து பாடும் நிலா எஸ்.பி.பி. நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று, மாலை 6 மணிக்கு தமிழகம் முழுவதும் திரையுலகினர், இசைப்பிரியர்கள், ரசிகர்கள், சாமானிய மக்கள் என லட்சக்கணக்கானோர் கையில் மெழுகு வத்தி ஏந்தியபடி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் நடத்திய பிரார்த்தனையின் பலனமாக அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்திருந்தது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், “கொரோனா காரணமாக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி பாலசுப்ரமணியம் தொடர்ந்து ஐசியுவில் வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ ஆகியவற்றின் மூலமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு சிகிச்சை அளித்து வரும் குழுவில் பல துறை நிபுணர்கள் உள்ளனர். Internal medicine, Critical Care, Pulmonology, Infectious Diseases மற்றும் எக்மோ கேர் ஆகிய துறை வல்லுனர்கள் உள்ளனர். மேலும் லண்டன் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் சர்வதேச வல்லுநர்களிடம்  சிகிச்சை பற்றி கேட்கப்படுகிறது. அவர்கள் அங்கு அதிக அளவில் எக்மோ மூலம் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அதிக அளவில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். நாங்கள் அளித்து வரும் சிகிச்சை சரியானது தான் என அவர்களும் கூறியிருந்தனர். இந்த செய்தி எஸ்.பி.பி. குடும்பத்தினர், திரைத்துறையினர் மற்றும் அவருடைய ரசிகர்கள் மனதில் பாலை வார்த்தது. 

இந்நிலையில் எஸ்.பி.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் வெளியிட்டதாக இன்று காலை அறிக்கை ஒன்று வெளியானது.  அதில் அப்பாவின் உடல் நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தொடர்ந்து ஆதரவு அளித்தவர்களுக்கும், கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இருந்தது. 

 

ஆனால் எஸ்.பி.பி-க்கு கொரோனா தொற்று குணமாகிவிட்டதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என எஸ்.பி.பி.சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தினமும் நான் மருத்துவர்களுடன் ஆலோசித்த பிறகு  அப்பாவின் உடல் நிலை குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறேன். ஆனால் இன்று காலை திடீரென அப்பாவிற்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என வந்துள்ளதாக வதந்தி பரவியது. ஆனால் இப்போது வரை அவர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் தான் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பாவின் உடல் நிலை நல்ல நிலையில் உள்ளது, அதனால் அவருடைய நுரையீரல் பிரச்சனை விரைவில் குணமடையும் என்று நம்புகிறோம். தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம். இன்று மாலை மருத்துவர்களுடன் ஆலோசித்த பிறகு அப்பாவின் உடல் நிலை குறித்து நானே தகவலை வெளியிடுகிறேன் என தெரிவித்துள்ளார். 

"

click me!