கௌண்டமணி, விவேக், வடிவேலுக்குப் பிறகு காமெடியில் தனி முத்திரை பதித்தவர் சந்தானம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’.
இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும், பகத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். இவர்களோடு சினேகா, பிரகாஷ் ராஜ், ரோபோ சங்கர், ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் டிசம்பர் 22-ஆம் தேதி ரிலீஸாகிறது.
அதே தேதியில் சந்தானம் நடித்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படமும் ரிலீஸாகிறது. இதுகுறித்து ‘சந்தானம் படம் உங்களுக்குப் போட்டியா?’ என்று சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.
அதில், “நான் எந்தப் படத்தையும் போட்டியாக நினைக்கமாட்டேன். என் படங்கள்தான் எனக்குப் போட்டி.
கௌண்டமணி, விவேக், வடிவேலுக்குப் பிறகு காமெடியில் தனி முத்திரை பதித்தவர் சந்தானம். அவர் இடத்தை நிரப்ப இன்னும் யாரும் வரவில்லை.
கதாநாயகனாக நடிக்க அவர் எடுத்த முடிவு துணிச்சலானது. ஹீரோவாக அவர் வெற்றி பெறுவார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.