வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலியை தத்தெடுத்த சிவ கார்த்திகேயன்…. 6 மாதத்திற்கான செலவை ஏற்றார்…

By Selvanayagam PFirst Published Oct 10, 2018, 10:31 AM IST
Highlights

வண்டலூர் பூங்காவில் உள்ள அனு என்ற வெள்ளைப் புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். இந்த புலியைப் பராமரிப்பதற்கான 6  மாத செலவை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பல்வேறு விலங்குகள்  உள்ளன. இவற்றை தமிழக அரசின் வனத்துறை பராமரித்து வருகிறது. அதே  நேரத்தில் பூங்காவில் உள்ள சிலஅரிய வவை விலங்குகளை தத்தெடுக்கும் வழக்கம் அங்கு நடைமுறையில் உள்ளது. அதன்படி நடிகர் சிவ கார்த்திகேயன் அனு என்ற வெள்ளைப் புலியை தத்தெடுத்துள்ளார்.

இது தொடர்பாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தியாவில் 1952-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2-ந்தேதி முதல் 8-ந்தேதி முடிய வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது.

இந்த விழா மக்களுக்கு வன உயரினங்களை பாதுகாத்தல் மற்றும் பேணுதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். இந்த ஆண்டின் முக்கிய குறிக்கோள் பூனைகளை காப்போம் என்பதாகும்.

வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்கும் திட்டம் 2009-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புலி மற்றும் சிங்கத்தின் உணவுக்காக நாளொன்றுக்கு ரூ.1196.68 செலவாகும், இதே போன்று இதர விலங்குகளுக்கு அதன் உணவிற்கேற்ப நாளொன்றிற்கான செலவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வன உயிரினங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அனு என்ற பெண் வெள்ளைப் புலியை 6 மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார், அதற்கான ஆவணத்தை அவர் பூங்கா இயக்குனர் எஸ்.யுவராஜிடம் வழங்கினார் என குறிப்பிடப்பட்டுள்ளது..

click me!