Simbu: உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன்... 'மாநாடு' வெற்றிக்கு நன்றி தெரிவித்த சிம்பு!

By manimegalai aFirst Published Nov 29, 2021, 3:20 PM IST
Highlights

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் இந்த படத்திற்கு, தற்போது நன்றி தெரிவித்து நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பல பிரச்சனைகளுக்கு இடையே 'மாநாடு' படம் வெளியாகுமா? என்கிற சூழ்நிலையில் கடைசி நேரத்தில் அனைத்து பிரச்சனைகளும் ஒருவழியாக சுமூகமாக, தீர்ந்த நிலையில்... 5 மணி காட்சி மட்டும் ரத்து செய்யப்பட்டு படம் வெளியானது. படம் வெளியானதில் இருந்தே... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் இந்த படத்திற்கு, தற்போது நன்றி தெரிவித்து நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் சிம்பு கூறியுள்ளதாவது, "இறைவன் மீதும், உழைப்பின் மீதும், நம்பிக்கை வைத்து மிக அழகாக உழைத்த படம் மாநாடு. எப்படியாவது என்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சி படுத்திவிட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது.

'மாநாடு' படம் உலகம் முழுக்க மிகப்பெரும் வெற்றியை அள்ளியெடுத்துள்ளது. இதற்கு காரணமான என் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அற்புதமான இயக்கத்தை தந்த வெங்கட்பிரபு. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், மாநாடு படக்குழுவும், என் தாய், தந்தை, படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர்கள். திரையரங்க உரிமையாளர்கள், திரையுலக நண்பர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் என் ரத்தமாகிய அன்பு ரசிகர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை உணர்வுகளையும் அடக்கிவிட முடியாது. ஆனால், பதிலுக்கு தெரிவிக்க வேறு வார்த்தை இல்லையே...

ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகளை தரையில் விழ விடாமல் தாங்கிக் கொண்ட உங்கள் அன்பிற்கு நான் அடக்கி அடங்கி மகிழ்கிறேன். உலகம் முழுக்க வெற்றியை தேடி தந்திருக்கிறீர்கள், அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும். அன்புடன் உங்கள் சிலம்பரசன் என 'மாநாடு' படத்தின் வெற்றிக்கு தன்னுடைய அறிக்கை மூலம் நன்றி தெரிவித்துள்ளார் சிம்பு.

click me!