shankar : ஒரு பாட்டுக்கு இத்தனை கோடியா?... இத வச்சு ஒரு படமே எடுக்கலாமே - டோலிவுட்டிலும் வேலையை காட்டிய ஷங்கர்

By Ganesh PerumalFirst Published Jan 20, 2022, 7:31 AM IST
Highlights

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் ஹீரோக்களை வைத்தே இதுவரை படம் எடுத்துக்கொண்டிருந்த ஷங்கர், தற்போது முதல் முறையாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்கம் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த படத்தின் ஒன் லைன் கதையை இயக்குனர் கார்த்தி சுப்புராஜிடம் இருந்து பெற்றுள்ளார். 

இது தன்னுடைய கதை என, கார்த்தி சுப்புராஜின் துணை இயக்குனர் ஒருவர் கூறியதால் பரபரப்பும் ஏற்பட்டு பின்னர் அடங்கியது. இதையடுத்து ஒருவழியாக அனைத்து பிரச்னையும் முடிவுக்கு வந்து, கடந்த செப்டம்பர் மாதம் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க உள்ள படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு, பூனேவில் துவங்கியது. 

இப்படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக இந்த படத்தில், பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் ஜெயராம், நவீன் சந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்எஸ் தமன் இசையமைப்பில், திரு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குனர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான். இவர் இதுவரை இயக்கிய படங்களில் பாடல் காட்சிகளுக்கு என்று தனி கவனம் செலுத்துவார் ஷங்கர். சில சமயங்களில் பாடல் காட்சிக்காக மட்டும் கோடிக்கணக்கில் அவர் பட்ஜெட் போடுவார். இதனால் தான் அவருக்கு பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரும் கிடைத்தது.

இதுவரை தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தை நிகழ்த்தி வந்த ஷங்கர், தற்போது டோலிவுட்டிலும் அதே பார்முலாவை பின்பற்றி வருகிறார். ராம்சரண் நடிக்கும் படத்துக்காக இயக்குனர் ஷங்கர் ஒரு பிரம்மாண்ட செட் போட்டு பாடல் காட்சி ஒன்றை படமாக்கி உள்ளாராம். அந்த செட்டின் மதிப்பு ரூ.23 கோடியாம். இதை அறிந்த டோலிவுட் வட்டாரம், இத வச்சு ஒரு படமே எடுத்திறலாமே என முணுமுணுக்கிறார்களாம்.

click me!