சலசலப்புக்கு மத்தியிலும்... வெற்றிமாறன் படத்துக்காக சேர்ந்து பணியாற்றிய சந்தோஷ் நாராயணன் - அறிவு கூட்டணி

By Ganesh AFirst Published Aug 6, 2022, 7:35 AM IST
Highlights

என்ஜாய் எஞ்சாமி பாடல் சர்ச்சை ஒருபுறம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சந்தோஷ் நாராயணனும், தெருக்குரல் அறிவும் தற்போது ஒரு பாடலுக்காக இணைந்து பணியாற்றி உள்ளனர்.

பா.இரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். முதல் படத்திலேயே தனது வித்தியாசமான இசை மூலம் கவனம் ஈர்த்த இவர் அடுத்தடுத்து பா.இரஞ்சித் உடன் உணைந்து காலா, கபாலி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை போன்ற திரைப்படங்களில் பணியாற்றினார்.

சார்பட்டா பரம்பரை படம் மூலம் இவர்களது வெற்றிக் கூட்டணி முடிவுக்கு வந்தது. இதற்கு காரணம் தெருக்குரல் அறிவுக்கும், சந்தோஷ் நாராயணனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான். சந்தோஷ் நாராயணன், தனது மகள் தீ-யையும், பா.இரஞ்சித் டீமை சேர்ந்த தெருக்குரல் அறிவையும் வைத்து என்ஜாய் எஞ்சாமி என்கிற சுயாதீன பாடலை உருவாக்கி இருந்தார்.

இப்பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த பாடலை புரமோட் செய்யும்போது அறிவை புறக்கணித்துவிட்டு, தனது மகள் தீயை மட்டும் முன்னிலைப்படுத்தியதாக சந்தோஷ் நாராயணன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுவே நாளடைவில் பெரிய பிரச்சனையாகவும் வெடித்தது. சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கூட என்ஜாய் எஞ்சாமி பாடலை தீ மட்டுமே வந்து பாடினார். 

இதையும் படியுங்கள்... திடீர் என திருமண கோலத்தில் மணமகளாக மாறிய சமந்தா! இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.. வைரல் போட்டோஸ்..!

அதில் அறிவு பங்கேற்காதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் கொடுத்த விளக்கத்தில் அறிவு அமெரிக்காவில் இருந்ததால் அவரால் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்தனர். ஆனால் அறிவோ, தன்னை புறக்கணித்துவிட்டதாக கூறி அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதன்பின்னர் சந்தோஷ் நாரயணன் மற்றும் தீ ஆகியோர் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு தங்கள் தரப்பு நியாயத்தை கூறினர்.

இப்படி இந்த பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சந்தோஷ் நாராயணனும், தெருக்குரல் அறிவும் தற்போது ஒரு பாடலுக்காக இணைந்து பணியாற்றி உள்ளனர். வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடித்துள்ள திரைப்படம் ‘அனல் மேலே பனித்துளி’. இப்படத்தில் இடம்பெறும் ‘கீச்சு... கீச்சு’ என்கிற பாடலுக்காக தான் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர். தெருக்குரல் அறிவு அப்பாடலுக்கான வரிகளை எழுத, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். 

இப்பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. நடிகர் ஆர்யா தான் இந்த பாடலை வெளியிட உள்ளார். ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படத்தை கைசர் ஆனந்த் என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... இயக்குனர் ஷங்கர் மற்றும் கிரிக்கெட் வீரர் ரெய்னாவுக்கு டாக்டர் பட்டம்!

click me!