
’நடிகர் சங்கம் நல்லபடியாக செயல்பட விடாமல் சிலர் சதி செய்கிறார்கள்’என்று விஷால் இரு தினங்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அது போன்ற காரியங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்றும் ஆனால் நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் வரும் என்று ஒரு குண்டைப் போடுகிறார் அவரது எதிரணியைச் சேர்ந்த ஐசரி கணேஷ்.
தேர்தல் முடிந்து ஐந்து மாதங்களுக்கும் மேல் ஆகியும் வாக்குகள் இதுவரை எண்ணப்படாத நிலையில் விரைவில் மறுதேர்தல் வரும் என்று ஐசரி கணேஷ் அறிவித்திருப்பது விஷால் வட்டாரத்தினரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு துறை மையமும் இணைந்து ஆண்டுதோறும் நவம்பர் 13 ஆம் தேதியன்று சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினம் அனுசரித்து வருகின்றனர். அதன்படி புதுச்சேரி கருவடிக்குப்பம் இடுகாட்டில் அமைந்துள்ள சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் கணேஷ், ஆர்த்தி, விக்னேஷ், உதயா ஆகியோர் சார்பிலும், அரசு சார்பில் சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் நாடக நடிகர்கள் ஆகியோர் மேளதாளத்துடன் அலங்கரிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் படத்துடன் ஊர்வலமாக வந்து மலரஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நிருபர்களைச் சந்தித்த ஐசரி கணேஷ்,’நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விதிமுறை மீறப்பட்டுள்ளது என்பதே எங்கள் புகார். விஷால் தொடர்ந்து கூறிவருவதுபோல் தனி அதிகாரி நியமனத்தில் எனது அழுத்தம் ஏதும் இல்லை. மறு தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் எந்த தீர்ப்பை அளித்தாலும் அதை ஏற்கவுள்ளோம்’என்று தெரிவித்தார். இவரது நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தல் என்ற பேச்சு தற்போது கோடம்பாக்கத்தைப் பரபரப்பாக்கியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.