Rajinikanth | ”இன்னும் இரண்டே படங்கள் தான்.. ஓய்வு பெறுகிறார் ரஜினிகாந்த்”!! கோலிவுட் ’ஹாட்டாக்’...

By Ganesh RamachandranFirst Published Nov 12, 2021, 10:16 AM IST
Highlights

Rajinikanth | கோடம்பாக்கம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விஷயம் இப்போது ரஜினியின் ரிடையர்மெண்ட் பற்றி தான். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் அனைவரும் இதைப் பற்றியே பேசுகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... கடந்த 40 ஆண்டு கால சினிமா வரலாற்றையும், 25 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றையும் இவர் பெயர் இல்லாமல் எழுதிவிட முடியாது. சாதாரண பஸ் கண்டக்டருக்கு, பாலசந்தர் என்ற குருநாதரும், எஸ்.பி.முத்துராமன் என்ற மாஸ் இயக்குநரும் கிடைக்க, திரையில் பல மாயங்கள் புரிந்து நாடுகள் கடந்தும் கோடானகோடி ரசிகர்களைப் பெற்று அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கிறார். தற்போது ரிலீஸான அண்ணாத்த படத்துக்குக் கூட விஜய், அஜித்தை விட அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டு வாங்கி இன்றும் தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் பெறும் நடிகராகத் திகழ்கிறார் என்று செய்திகள் வலம் வந்தன. ஆக 71 வயதிலும் ரஜினியின் மார்கெட் சரியவில்லை.

எத்தனையோ சாதனைகள் புரிந்து இன்று இந்திய சினிமாவின் உச்சமான தாதாசாகெப் பால்கே விருது வரையில் வந்து நிற்கிறார் ரஜினி. ஆனால் அதோடு நின்றுவிடுவாரோ என்று அச்சம் கொள்கின்றனர் ரசிகர்கள். காரணம், ரஜினிகாந்த் சினிமாவிலிருந்து ஓய்வு பெறப்போகிறார் என்ற உறுதிபடுத்தப்படாத தகவல் தான்.

ஏற்கனவே சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் அரசியல் பிரவேசத்துக்கான கட்சிக் கட்டமைப்பு, தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்வதற்கான பணிகள் என்று அனைத்தும் தயார் நிலையில் இருந்தபோது, உடல் நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என்று கூறி 25 ஆண்டு கால கன்னித்தீவுக் கதைக்கு முடிவுரை எழுதினார் ரஜினிகாந்த். இந்த நிலையில் தான், சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரிலீஸுக்கு முன்பாக உடல்நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதாகவும் அது வெற்றிகரமாக சரி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே ரஜினிகாந்த் சிறுநீரகப் பிரச்சனையால் அவதிப்பட்டவர். அவருக்கு சிங்கபூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. மருத்துவ ரீதியில் மாற்று சிறுநீரகத்துக்கு 8 ஆண்டுகள் வரையில் சிக்கல் இல்லை என்றும், அதன் பிறகு மிக கவனமாக நொயாளியை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுவது வழக்கம். ரஜினிகாந்த்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்று கூறப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இதனால் தான், அரசியலுக்கு எண்ட்ரி கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் ரஜினியை கண்டிப்புடன் கூறியதாக தகவல்கள் தெரிவித்தன. தற்போது அண்ணாத்த ரிலீஸுக்கு முன் ஏற்பட்ட உடல்நலக் கோளாறுக்குப் பிறகு சண்டைக் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனராம். 71 வயது ஆனாலும், சூப்பர்ஸ்டார் என்பவர் சண்டை போடாமல் நடித்தால் ரசிகர்கள் ஏற்பார்களா என்ற விவாதம் கோடம்பாக்கம் டீக்கடைகளில் சினிமாக்காரர்களால் விவாதிக்கப்படுகிறது. அதே நேரம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் தன் வயதுக்கு ஏற்ற கதாப்பாத்திரங்களில் நடித்து, நல்ல பெயரை தக்கவைத்துள்ளார். ஆனால் அந்த ருட் ரஜினி விரும்புவாரா என்பதும் சிந்திக்க வேண்டியதே. காரணம் ”ரஜினிகாந்த்” என்ற பிம்பம் மிகப் பெரியது. அந்த பிம்பச்சிறையில் அவர் அகப்பட்டு, தன் குருநாதர் பாலசந்தர் வழியில் சிறிய பட்ஜெட் - மனசுக்கு நிறைவு தரும் கதாப்பாத்திரங்கள் என்று பயணிக்க முடியாமல் உள்ளார் என்று தெரிகிறது.

ஆக, ரஜினிகாந்த் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று அனைவரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். அவர் அடுத்த 2 படங்களோடு ஓய்வு பெறப்போகிறார் என்று கோலிவுட் வட்டாரங்கள் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. குறிப்பாக தனது அடுத்த படத்தை ஒரு இளம் இயக்குநரோடு இணைந்து உருவாக்கப்போவதாகவும், அதற்காக பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ஆகியோரை டிக் செய்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதன் பிறகு தனது கடைசி படத்தை தனது மகள்களான சௌந்தர்யா, ஐஷ்வர்யா ஆகியோரில் யாராவது ஒருவரோ அல்லது இருவரும் இணைந்தோ இயக்க வேண்டும் என்று ரஜினி விரும்புகிறாராம். தன் மகள்கள் இயக்கும் படத்தோடு ஓய்வு பெற ரஜினி விரும்புவதாக கூறப்படுகிறது. அதன் பிறகு சென்னையிலோ அல்லது அமெரிக்காவிலோ அமைதியான வாழ்கையை அமைத்துக்கொள்ள ஆசைப்படுகிறாராம் ரஜினிகாந்த். 46 ஆண்டுகள் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக என்றும் ஊடக வெளிச்சத்தின் பரபரப்பிலேயே வாழ்ந்த ரஜினிகாந்த், அமைதியான சராசரி ஓய்வு வாழ்கையை எதிர்பார்க்கிறாராம். அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்குக் காத்திருப்போம்...

click me!