இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பல பிரபலங்கள் மட்டும் இன்றி, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் காசி விஸ்வநாதன் என்பவர் வந்துள்ளர். இசை வெளியீட்டு விழா முடிந்த பின், ரயில் மூலம் தன்னுடைய சொந்த ஊரான மதுரைக்கு திரும்பியுள்ளார்.
இவர் பயணசீட்டு முன்பதிவு செய்யாததாலும், ரயில் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், ஆபத்தை உணராமல் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
ரயில், மறைமலையடிகள் இரயில் நிலையத்தை அடைந்த போது, நடைமேடை வருவதை கவனிக்காமல் காசி விஸ்வநாதன் அமர்திருந்ததால் நடைமேடையில் காசி விஸ்வநாதனின் இரு கால்களும் மோதி துண்டாகின.
தற்போது இவர் சிகிச்சைக்காக இராஜிவ் காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
மேலும் "காலா" இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த ராசிகரின் கால்கள் துண்டாக்கப்பட்ட தகவல் பலருக்கும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.