நடிகர் ராதா ரவி திமுகவில் இருந்து நீக்கம் ! மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை !!

By Selvanayagam PFirst Published Mar 25, 2019, 6:44 AM IST
Highlights

கொலையுதிர்க்காலம் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா குறித்து அவதூறாக பேசியதால்  நடிகர்  ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். 

திரையுலகை பொறுத்த வரை, அடிக்கடி பல சர்ச்சைகள், மற்றும் பிரச்சனைகள் வந்து ஓய்வது சகஜம் தான். அந்த வகையில் தற்போது வரை, புகைந்து கொண்டிருக்கும் விஷயங்களில் ஒன்று, 'மீடூ' பிரச்சனை. இதை தொடர்ந்து தற்போது பலர் மத்தியில் நயன்தாரா பற்றி நடிகர் ராதா ரவி இரட்டை அர்த்தத்தோடு பேசியுள்ளது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

நேற்று முன்தினம் நடந்த சினிமா விழாவில் கலந்து கொண்டு பேசிய, மூத்த நடிகர் ராதா ரவி, நடிகை நயன்தாரா பற்றி மோசமான வார்த்தைகளால் விமர்சித்து பேசியுள்ளதற்கு பலர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நயன்தாராவின் காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனும், தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் கோபமாக சில பதிவுகளை போட்டுள்ளார்.   ஒரு பழம்பெரும் நடிகர் குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர் இழிவான வகையில் ஒருவரை விமர்சனம் செய்திருப்பதும், அதற்கு எதிராக எந்த சங்கமும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கண்டனத்துக்குரிய என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தான் நடிகர் ராதாரவியை திமுகவில் இருந்து அக்கட்சி தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாலும் தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். 

கொலையுதிர்க்காலம் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா பற்றி அவதூறாக பேசியதால் தான் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!