சிம்பு நடிக்கவுள்ள மாநாடு படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக அமைந்துள்ளதாகத் தயாரிப்பாளர் ஹேப்பி டிவீட்
சுந்தர்.சி இயக்கத்தில், தற்போது 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதனைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவின் 'மாநாடு' படத்தில் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரசியல் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக இது உருவாவதாக கூறப்படும் இந்த படத்தில், சிறப்புப் பயிற்சி பெற பாங்காக் செல்கிறாராம் சிம்பு. அதோடு 'மாநாடு' படத்தின் கேரக்டருக்காக உடல் எடையை சற்று குறைக்கவும் முடிவெடுத்திருக்கிறாராம். தற்போது மாநாடு படத்தின் ஃப்ரீ புரொடக்ஷன் வேலைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாம். விரைவில் இதன் படபிடிப்பைத் துவங்கி அடுத்தாண்டு இறுதியில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
தமிழில் அரசியலை விமர்சித்து எடுக்கவிருக்கும் மாநாடு படத்தின் திரைக்கதையை வெங்கட் பிரபு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கூறியுள்ளார். மிகவும் ரசித்துக் கேட்ட சுரேஷ் காமாட்சி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“எனது இயக்குநர் வெங்கட் பிரபு அருமையாக திரைக்கதையைக் கூறியதைக் கேட்டேன். ஏற்ற இறக்கமான, குறுக்கும் நெடுக்குமான திரைக்கதை. கண்டிப்பாக சிம்புவின் ரசிகர்கள் மிகவும் ரசித்து இந்தப் படத்தை பார்ப்பார்கள். சிம்புவின் திரைப்பயணத்தில் இந்தப் படம் மாஸ்டர் பீஸாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.