'விஷாலுக்கு சம்பளப் பாக்கி என்கிற பேச்சுக்கே இடமில்லை’... திருப்பி அடிக்கும் தயாரிப்பாளர்

By vinoth kumarFirst Published Nov 11, 2018, 4:21 PM IST
Highlights


’எனக்கு எதிராக நடிகர் சங்கம் போட்டிருக்கும் ரெட் கார்டு என்பது சங்கத்தின் ஒட்டுமொத்த முடிவாகத் தெரியவில்லை. என்னிடமுள்ள காழ்ப்புணர்ச்சியால் விஷால் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவாகவே தெரிகிறது’ என்கிறார் ‘96 படத்தயாரிப்பாளர் நந்தகோபால்.


’எனக்கு எதிராக நடிகர் சங்கம் போட்டிருக்கும் ரெட் கார்டு என்பது சங்கத்தின் ஒட்டுமொத்த முடிவாகத் தெரியவில்லை. என்னிடமுள்ள காழ்ப்புணர்ச்சியால் விஷால் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவாகவே தெரிகிறது’ என்கிறார் ‘96 படத்தயாரிப்பாளர் நந்தகோபால்.

இனி நடிகர் சங்கம் தயாரிப்பாளர் நந்தகோபால் தயாரிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு தராது என்று அறிவித்திருந்த நிலையில் தனது தரப்பு நியாயங்களை சொல்வதற்காக தயாரிப்பாளர் சங்கம் வந்திருந்த நந்தகோபால் நிருபர்களிடம் பேசினார்.

“விஷால் நடிப்பில் நான் தயாரித்த ‘கத்திச் சண்டை’ படத்தில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதன் பிறகும் நான் தொடர்ந்து விஷாலுடன் நட்பில்தான் இருந்தேன். அந்தச் சமயத்தில்தான் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘துப்பறிவாளன்’ படத்தை பர்ஸ்ட் காப்பி தயாரிப்பாளராக என் சார்பில் அவர் தயாரித்தார். ஆனால் படத்தை சொன்ன தேதியில் அல்லாமல் எட்டு மாதங்கள் கழித்தே என் கையில் கொடுத்தார். இதனால் எனக்கு பல லட்சங்கள் வீணாகச் செலவானது. இதனால் தயாரிப்பின்போது கூடுதலாக பணம் செலவானதாகச் சொல்லி விஷால் கேட்ட தொகையை என்னால் அவருக்குத் தர முடியவில்லை.

இந்தத் தொகையை பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். இது தொடர்பாக ஒரு முறை படப்பிடிப்பின்போது நாங்கள் இருவரும் பேசினோம். அப்போது விஷாலே “இப்போது அது பற்றி பேச வேண்டாம்” என்று சொல்லிவிட்டார். ஆனால், அதே பிரச்சினையை முன் வைத்து ‘96’ பட வெளியீட்டின்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷாலே பிரச்சினை செய்வார் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பிரச்சினையின்போது விஜய் சேதுபதி முன் வந்து எனக்கு உதவி செய்து அந்தப் படத்தை வெளியிட வைத்தார்.

இப்போதும் விஷால் ‘துப்பறிவாளன்’ படத் தயாரிப்பில் கூடுதலாக செலவு செய்த பணத்தைத்தான் என்னிடத்தில் கேட்கிறாரோ ஒழிய.. ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்தமைக்கான சம்பளப் பாக்கியை அல்ல. அவர்தான் அந்தப் படத்தின் பர்ஸ்ட் காப்பி தயாரிப்பாளர் என்பதால் தயாரிப்புச் செலவோடு அவரது சம்பளமும் அடங்கிவிடும். அதனால் விஷாலுக்கு சம்பளப் பாக்கி என்கிற பேச்சுக்கே இடமில்லை..!

அந்தப் படத்தில் நடித்தமைக்காக விக்ரம் பிரபுவுடன் சம்பள காண்ட்ராக்ட் எதையும் நாங்கள் போடவில்லை. சாட்டிலைட் உரிமையில் பாதி, பாதியை எடுத்துக் கொள்ளலாம் என்று அப்போதைக்கு வாய்ப் பேச்சாக பேசிக் கொண்டோம். ஆனாலும் விக்ரம் பிரபுவுக்கு 75 லட்சம் ரூபாய் வரையிலும் நான் சம்பளமாக கொடுத்துவிட்டேன்.

விஜய் சேதுபதியை பொருத்தமட்டில் அவர் ‘96’ படத்தில் நடித்தமைக்கான சம்பளம் முழுவதையும் அப்போதே கொடுத்துவிட்டேன். அவருக்கு எந்தப் பாக்கியும் இல்லை.

எனக்கும், விஷாலுக்குமான இந்தப் பிரச்சினை கடந்த ஓராண்டாகவே புகைந்து கொண்டுதான் இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் நான் இது குறித்து புகார் கொடுத்து பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்தபோது நடிகர் சங்கத்தில் இருந்து யாருமே வரவில்லை. ஆனால், இப்போது திடுதிப்பென்று இப்படியொரு நடவடிக்கையை அவர்கள் கையாண்டிருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவருக்கும் இந்த விஷயத்தில் என்னுடைய பங்கு என்ன.. யார் மீது தவறுகள் உள்ளன.. என்பதெல்லாம் நன்றாகவே தெரியும்.. அவர்கள் நல்ல முடிவையெடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்..” என்று சொல்லி முடித்தார்.

click me!