புஷ்பா, ஆச்சார்யா ஆகிய படங்களில் இடம்பெற்ற ஐட்டம் சாங்கிற்கு அமோக வரவேற்பு கிடைத்ததால், தற்போது பிரபாஸின் சலார் படக்குழுவும் அதே பார்முலாவை பின்பற்ற உள்ளதாம்.
சினிமாவில் ‘ஐட்டம் சாங்’ என்பது புதிதல்ல. ஆண்டாண்டு காலமாக நீடித்து வரும் ஒன்று தான். இதற்கு முன் சில்க் ஸ்மிதா, அனுராதா, பபிதா, டிஸ்கோ சாந்தி என ஐட்டம் சாங்கிற்கு நடனம் ஆடுவதற்கென ஒரு சில நடிகைகள் இருந்தனர். ஆனால் தற்போது அதெல்லாம் மாறிவிட்டது. இப்போதிருக்கும் புது டிரெண்ட் என்னவென்றால், முன்னணி நடிகைகளை கவர்ச்சி நடனம் ஆட வைப்பது தான். அந்த டிரெண்டை புஷ்பா படத்தின் மூலம் பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைத்தார் சமந்தா.
அதே பார்முலாவை பின்பற்றி தற்போது சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி இருக்கும் ஆச்சார்யா படத்தில் நடிகை ரெஜினா குத்தாட்டம் போட்டார். இவ்வாறு முன்னணி நடிகைகள் ஐட்டம் சாங்கிற்கு நடனமாட சம்மதிப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.
அது என்னவென்றால், அவர்கள் ஒரு படத்திற்காக மாதக்கணக்கில் நடித்து வாங்கும் சம்பளத்தை விட ஓரிரு நாட்களில் முடியும் ஐட்டம் சாங்கிற்கு கிடைக்கும் சம்பளம் அதிகமாம். இந்த டிரெண்டை அடுத்ததாக பிரபாஸின் சலார் படக்குழுவும் பின்பற்ற உள்ளதாம்.
இப்படத்தில் இடம்பெறும் ஐட்டம் சாங்கில் குத்தாட்டம் போட பிரபல கன்னட நடிகை ஆஷிகாவை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த பாடல் காட்சியை படமாக்கவும் உள்ளார்களாம். இப்படத்தை கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.