நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் கொடுத்து, பாடகர், பாடலாசிரியர் என வளர்ந்து, இன்று முதல் முறையாக இயக்குனராக அறிமுகம் கொடுத்துள்ளார் தனுஷ், அப்பா,அண்ணா, அண்ணி, மனைவியை அடுத்து இவரும் இயக்கத்தில் இறங்கி இந்த களத்தில் வெற்றியை கண்டாரா இல்லையா என பார்ப்போம்...
திரைப்படத்தின் கதை...
வாழ்க்கையில் எப்போதும் மனைவி, குழந்தை பிறகு அவர்கள் குழந்தை என அவர்களுக்காகவே தான் நம் வாழ்க்கை சுழல்கிறது, நமக்காக எத்தனை பேர் வாழ்கிறோம், அப்படி வாழ ராஜ்கிரண் முடிவு செய்தால் எப்படியிருக்கும்? இது தான் பவர் பாண்டியின் ஒன்லைன்.
ராஜ்கிரண் பவர் பாண்டியாக சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி ஏன் அமிதாப் வரை ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி, தன் மகன் பிரச்சன்னாவை நன்றாக வளர்க்க, அவரும் நன்றாக செட்டில் ஆகிவிடுகின்றார்.
அதன் பிறகு ராஜ்கிரணை வீட்டில் ஒரு வாட்ச்மேன் போல் தான் நடத்துகின்றனர், அவரும் பேரன், பேத்தி மேல் இருக்கும் அன்பினால் பொறுத்து, பொறுத்து செல்கின்றார்.
ஒரு கட்டத்தில் தனக்கான வாழ்க்கையை தான் வாழவேண்டும் என்று ஒரு பைக் ரைட் செல்ல, அங்கு தான் தன் முதல் காதலியை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வர, பிறகு என்ன ஆனது என்பதை மிகவும் எமோஷ்னலாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் தனுஷ்.
திரைப்படத்தை பற்றிய அலசல்...
ராஜ்கிரணுக்கு எத்தனை விருதுகளை வேண்டுமானாலும் அள்ளிக்கொடுக்கலாம், தன் மகனுக்காக அத்தனை தியாகங்களை செய்து, பின் அவர் வீட்டில் அவருடைய கட்டுப்பாட்டில் சுதந்திரமாக ஏதும் செய்ய முடியாமல் பேரன், பேத்தி தான் உலகம் என வாழும் இடத்திலும் சரி, எனக்கு சுதந்திரம் வேண்டும் என சரக்கு அடித்துவிட்டு மகனிடம் கோபப்படும் இடத்திலும் சரி இன்றைய பல நடிகர்களை தூக்கி சாப்பிடுகின்றார் ராஜ்கிரண்.
அதிலும் குறிப்பாக பல நாட்கள் வீட்டில் இருந்து Bore அடித்து சினிமா ஷுட்டிங் போக, அங்கு அவரை ஒரு கடவுள் போல் அத்தனை ஸ்டண்ட் கலைஞர்களும் பார்க்க, அதற்கு அவர் கொடுக்கும் ரியாக்ஷன் எல்லாம் பைட் மாஸ்டர்கள் மீதும் காதல் வரவைக்கும்.
பிரசன்னா, சாயாசிங், சில நேரம் வந்து செல்லும் டிடி, கௌதம் மேனன், பாலாஜி மோகன், ரோபோ ஷங்கர், ராஜ்கிரணின் பேரன், பேத்தி இரண்டு குட்டிஸ் வரை அத்தனை யதார்த்தமாக கலக்கியுள்ளனர். ரேவதி நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில். அத்தனை வருடம் கடந்தும் காதலை மறைக்க முடியாமல் அவர் ராஜ்கிரணிடம் காட்டும் வெட்கம் ரசிக்க வைக்கின்றது.
படம் இத்தனை யதார்த்தமாக இருந்தாலும், காமெடி என்று நினைத்தார்களா? இல்லை பைட் மாஸ்டர் என்பதால் அப்படி சண்டைக்காட்சிகளை வைத்தார்களா தெரியவில்லை, சண்டைக்காட்சிகள் கொஞ்சம் யதார்த்தம் விலகியே உள்ளது.
க்ளாப்ஸ்
நடிகர், நடிகைகளின் பங்களிப்பு, குறிப்பாக ராஜ்கிரண் - ரேவதி ரொமான்ஸ் காட்சிகள். மேலும் படத்தின் வசனங்கள்
இன்றைய காலக்கட்டத்தில் அப்பா, அம்மாக்களை கவணிக்காத பிள்ளைகளுக்கு பாடம் புகட்டும்படியான பல காட்சிகள்.
தனுஷ் - மடோனா சிறுவயது ராஜ்கிரண், ரேவதியாக வருகின்றனர், ப்ளாஷ்பேக் 1960களின் நடப்பது போல் உள்ளது, அதைக்கூட அத்தனை அழகாக நம் கண்முன் கொண்டு வந்துள்ளனர்.பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு என டெக்னிக்கல் டீம் சபாஷ்.
பல்ப்ஸ்
மடோனா கொஞ்சம் மதுரை பொண்ணாக செட் ஆகாதது போல் ஒரு ஃபீலீங்.
அத்தனை வருடம் தொலைந்து போன காதலியை ஒரு செகண்டில் பேஸ்புக்கில் கண்டுப்பிடிப்பது எல்லாம் இந்த ஜெனேரஷன் தனுஷ் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.
மொத்தத்தில் படத்தை பார்த்த அனைவருக்குமே அவர் அவர்களின் தாய், தந்தையின் மீது ஒருபடி மேலே மரியாதை வரவைக்கும், அவர்கள் உலகங்களை கொஞ்சம் புரிந்துக்கொள்ள முயற்சி செய்வார்கள், தனுஷ் புதிதாக தொடுவதெல்லாம் ஹிட்டு தான்.
அனைவருடைய கருத்து...
மொத்தத்தில் இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என யோசித்தவர்கள் சூப்பர் என ஒரே வார்த்தையில் கூறி இருக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு கண்டிப்பாக ராஜ் கிரணுக்கு விருது கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.