#BREAKING கொரோனாவால் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 6, 2021, 9:19 AM IST
Highlights

கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். 

தமிழ் திரையுலகத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் விவேக் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அந்த சோகத்தில் இருந்து திரையுலகினர் மீள்வதற்குள் முன்னணி ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் கொரோனா தொற்றுக்கு பலியானார். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி காலமானார். 

இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த பாண்டு கொரோனா தொற்றால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ படத்தின் மூலம திரையுலகில் அறிமுகமான பாண்டு‘சின்னத் தம்பி’, ‘திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’ ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

 இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சூழலில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்று பாண்டு (74) காலமானார். அவரது மனைவி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவரகளின் கண்காணிப்பில் உள்ளார்.

பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை வடிவமைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கொடியை வடிவமைத்து கொடுத்தது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!