சன் டிவியில் ஒளிபரப்பான 'வம்சம்' சீரியலில் நடிகையாக அறிமுகமான ரேஷ்மா, 'மசாலா படம்' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாகவும் இண்ட்ரோ கொடுத்தார்.
அதன்பின் ஒரு சில படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்திருந்தாலும் ரேஷ்மாவை லைம் லைட்டுக்கு கொண்டுவந்த படம் 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்'. இந்தப் படத்தில், சூரியின் மனைவி புஷ்பாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்-3' நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமாகியுள்ளார் ரேஷ்மா.
திரைப்படங்களின் மூலம் அனைவரையும் ரசிக்க வைக்கும் அவருக்கு, நிஜ வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படி வசந்தமாக அமையவில்லை.
பெற்றோர் பார்த்து செய்த வைத்த திருமணமும் சரி, அவர் செய்து கொண்ட காதல் திருமணமும் சரி இரண்டுமே பிரிவில்தான் முடிந்தது. தற்போது காதல் கணவருக்கு பிறந்த மகனுடன் வசித்துவரும் ரேஷ்மா, விரைவில் மறுமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதற்கேற்றார்போல், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிஷாந்த் ரவிந்திரன் என்பவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் ரேஷ்மா. அந்த பதிவில், "வாழ்க்கை மிகவும் சிறியது. அதனால் உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்பர்களுடன் வாழ்நாளை செலவிடுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மறுமணம் தொடர்பான தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்த இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து, ரேஷ்மா 3-வது திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக செய்திகளும் வெளியாகின.
இந்நிலையில், இதற்கு நடிகை ரேஷ்மா தனது ட்விட்டர் பக்கம் மூலம் காட்டமாக விளக்கமளித்துள்ளார். அதில், "என் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான செய்திகள் பொய்யானவை.
என்னைப் பற்றிய பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள். நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், 3-வது திருமணம் தொடர்பாக பரவிய செய்திகள் அனைத்தும் பொய் என பொட்டில் அறைந்தது போல் சொல்லியுள்ளார் 'பிக்பாஸ்' ரேஷ்மா.