‘நேர்கொண்ட பார்வையும் “காவலனுக்கான” தேவையும் !’...அஜீத்துக்கு குவியும் போலீஸ் பாராட்டுக்கள்...

By Muthurama LingamFirst Published Aug 12, 2019, 3:32 PM IST
Highlights

படத்தை திரைப்பட விமர்சகர்கள் பாராட்டுவதற்கும், ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநர்கள் பாராட்டுவதற்கும் வித்தியாசம் உண்டு. அப்படி கடந்த வாரம் அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை பற்றிய தன் கருத்துகளை தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் நெல்லை போலீஸ் டெபுடி கமிஷனர் அர்ஜுன் சரவணன்.
 

படத்தை திரைப்பட விமர்சகர்கள் பாராட்டுவதற்கும், ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநர்கள் பாராட்டுவதற்கும் வித்தியாசம் உண்டு. அப்படி கடந்த வாரம் அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை பற்றிய தன் கருத்துகளை தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் நெல்லை போலீஸ் டெபுடி கமிஷனர் அர்ஜுன் சரவணன்.
 
அத்துடன் காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆற்றும் பணியினையும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் இதனைப் படித்து பயன்பெறலாம். காவல்துறை நான் நண்பன் என்பதற்கான சிறப்புக் கட்டுரையாக இந்தப் பதிவைக் கருதலாம். ‘நேர்கொண்ட பார்வையும் “காவலனுக்கான” தேவையும் !’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் அவரது பதிவு கீழே…
 
நடிகர் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அனைத்து துறைகளிலும் மிக வேகமாக முன்னேறி வரும் பெண்கள், தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை சட்டத்தின் துணையுடன் எவ்வாறு எதிர்கொள்வது என்பதை நன்கு விளக்கி, திரைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும் பல புதிய கருத்துகளை புகுத்தியுள்ளது இத்திரைப்படம்.
 
நடிகர் அஜித்குமார் அவர்களின் திரைப்பயணத்தில் இத்திரைப்படம் புதிய மைல்கல் என்றே சொல்லலாம். பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டேவின் நடிப்பும், தொழில்நுட்ப கலைஞர்கள் பணியும் பாராட்டத்தக்கது.சட்டத்தை நிலை நிறுத்துவதில் வழக்கறிஞர்களின் கடமையை இயக்குநர் ஹெச்.வினோத் சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளார். சமூக அக்கறையுள்ள இயக்குநர்களின் வரிசையில், இவர் முன் வரிசையில் அமர்ந்துவிட்டார் !
 
பெண்களின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்ய தமிழக காவல்துறை மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகள்…🎯 பெண்கள் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை KAVALAN SOS என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதனை பதிவிறக்கம் செய்வதன் மூலம் எந்த ஒரு அவசர நிலையிலும் ஒரு க்ளிக் மூலம் காவல்துறை உதவியைக் பெற முடியும். மேலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் 5 பேருக்கும் அவசர உதவி கோரி குறுந்தகவல் செல்லும் .
 
🎯 பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரையோ புகைப்படத்தையோ காவல்துறை மற்றும் ஊடகங்கள் வெளியிட தடை உள்ளது. பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகும் என்று எண்ணியே பலர் புகார் அளிப்பதில்லை.
 
🎯 குழந்தைகளுக்கெதிரான வழக்குகளில் மரணதண்டனை அளிக்கும் போக்சோ சட்டம் ( Protection of Children from Sexual Offences Act) நிறைவேற்றியுள்ளது .
இவ்வழக்குகளில் ஜாமீன் கிடைப்பதும் கடினம்.🎯 தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ( Crime against women) விசாரிக்க தனிப்பிரிவு செயல்படுகிறது.
 
.🎯அனைத்து காவல் நிலையங்களிலும் சீருடை அணியாத குழந்தை நல அலுவலர்கள் ( Child friendly Police officers) பணியில் உள்ளனர்.பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் யார், எவர், அவரது பின்னணி.மற்றும் சூழல் பார்க்காமல் அவர்கள் அனுமதியில்லாமல் நடக்கும் எதுவுமே குற்றமே என்ற அழுத்தமான செய்தியை லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்றோர் கூறும்போது ஏராளமானோரை சென்றடையும்.பெண் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை விட, ஆண் குழந்தைகள் அவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லி வளர்ப்பதே தற்போதைய தேவை.நேர்கொண்டபார்வை இக்காலத் தேவை ! 
  – ©அர்ஜுன் சரவணன் – டெபுடி கமிஷனர் ஆப் போலீஸ், நெல்லை என்று அட்டகாசமான பதிவை வெளியிட்டுள்ளார் அவர்.

click me!