முதல் முறையாக மணிரத்னத்துடன் கைகோர்த்து பொன்னியின் செல்வி ஆகிறார் நயன்தாரா...

By Muthurama LingamFirst Published Apr 5, 2019, 9:41 AM IST
Highlights

நடிகர் ராதாரவியின் சர்ச்சைப் பேச்சுக்குப் பிறகு அறிக்கை வெளியிட்ட நயன்தாரா ‘பேயாக, தாயாக, காதலியாக, மனைவியாக வேறு எதுவாக வேண்டுமானாலும் நடிப்பேன்’ என்று கொடுத்த துணிச்சலான அறிக்கையால் ஈர்க்கப்பட்டோ என்னவோ தனது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலி என்னும் மிக முக்கியமான பாத்திரத்தில் அவரை நடிக்கவைக்க முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.
 

நடிகர் ராதாரவியின் சர்ச்சைப் பேச்சுக்குப் பிறகு அறிக்கை வெளியிட்ட நயன்தாரா ‘பேயாக, தாயாக, காதலியாக, மனைவியாக வேறு எதுவாக வேண்டுமானாலும் நடிப்பேன்’ என்று கொடுத்த துணிச்சலான அறிக்கையால் ஈர்க்கப்பட்டோ என்னவோ தனது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலி என்னும் மிக முக்கியமான பாத்திரத்தில் அவரை நடிக்கவைக்க முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில வி‌ஷயங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரையும், தெலுங்கு, இந்தி திரையுலகை சேர்ந்த நடிகர்களையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் இந்த படத்தில் ஒப்பந்தமாகவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி, பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் மணிரத்னம். வந்தியத்தேவனை இலங்கைக்கு அழைத்து சென்று அருள்மொழி வர்மனை காப்பாற்றி தமிழகம் அழைத்து வரும் முக்கிய கதாபாத்திரமான பூங்குழலியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மணிரத்னம் படம் ஒன்றில் நயன் நடிப்பது இதுவே முதல்முறை.

படத்தின் கதாபாத்திரங்கள் தேர்வு இறுதிநிலையை எட்டியிருக்கும் நிலையில், படப்பிடிப்பை 3 மாதங்கள் முன்பாக செப்டம்பரில் துவங்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. முதலில் கார்த்தி, ஜெயம் ரவி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கதாபாத்திரங்கள் விவரம் வரும் வாரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

நயன்தாராவையும் சேர்த்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைவதால் இந்தியாவில் மிக அதிக வில்லைக்கு விற்கப்பட்ட முதல் முதல் படம் என்ற பெருமையை ‘பொன்னியின் செல்வன்’ மூலம் தட்டிச்செல்ல ’மணி’ ரத்னம் முடிவு செய்திருக்கிறார்.

click me!