“அப்பாவுக்கு நினைவு திரும்பிவிட்டது”... உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக எஸ்.பி.பி.சரண் அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 16, 2020, 8:18 PM IST
Highlights

இதனிடையே நேற்றிலிருந்து எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து நல்ல செய்திகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி மயக்கத்திலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் கண் விழிந்து விட்டார் என்ற செய்தி வெளியானது. 

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தன்னை மருத்துவர்கள் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள கூறியதாகவும், ஆனால் குடும்பத்தினர் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறினார். தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும்,  மருத்துவர்கள் தன்னை ஓய்வில் இருக்க சொல்லியுள்ளதால் யாரும் எனக்கு போன் செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். 

கடந்த 14ம் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து கடந்த 5ம் தேதியில் இருந்து எம்.ஜி.எம். மருத்துவமனையில் இருக்கிறார்.  அவரின் உடல்நலம் திடீர் என்று மோசமடைந்தது. மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின்படி அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது” என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. கொரோனாவுடன் தீவிரமாக போராடி வரும் எஸ்.பி.பி. நல்ல படியாக வீடு திரும்ப வேண்டுமென இளையராஜா, சிரஞ்சீவி, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், ராதிகா, தனுஷ், அனிருத், சின்மயி, பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.  

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இடையில் எஸ்.பி.பி உடல்நிலை குறித்து சோசியல் மீடியாவில் வதந்தி பரவியது. அப்போது அப்பாவின் உடல் நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் எனக்கூறிய எஸ்.பி.பி. சரண், அவருடைய உடல்நிலை குறித்து நாங்களே தகவல் கொடுக்கிறோம் எனக்கூறியிருந்தார். 

இதனிடையே நேற்றிலிருந்து எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து நல்ல செய்திகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி மயக்கத்திலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் கண் விழிந்து விட்டார் என்ற செய்தி வெளியானது. தற்போது தந்தையின் உடல்நிலை குறித்து எஸ்.பி.பி.சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அப்பாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் இப்போது மயக்கத்தில் இல்லை. தனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை அடையாளம் கண்டுகொள்கிறார். தற்போது அவருக்கு சுவாசிப்பதில் சிக்கல் எதுவும் இல்லை. இருப்பினும் அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தம்ஸ் அப் காட்டும் அளவிற்கு அவருடைய உடலில் அசைவுகள் ஆரம்பித்துள்ளன. அடுத்து வரும் நாட்களில் அப்பா பூரண குணமடைந்து விரைவில் பழைய நிலைக்கு திரும்புவார். தொடர்ந்து அப்பாவிற்கு பிரார்த்தனை செய்யுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.

click me!