தன்னைத்தானே தூக்கி எடை கணித்து, தன் பலத்தை உலகத்துக்கும் காட்டுவது கலைஞனின் குணாதிசயம். இது தற்பெருமையோ, கர்வமோ அல்ல. தன் தகுதிக்கு தரம் சேர்க்கும் விஷயம், தன் திறமைக்கு நியாயம் செய்யும் விஷயம். அப்படிப்பட்ட எழுத்தாளர்களில் முதன்மையானவர் ஜெயமோகன்.
புத்தக படைப்பாளியாக மட்டுமே இருந்த அவர் இப்போது திரையுலகத்திலுள்ளும் தொடர்ந்து வலம் வர துவங்கியிருக்கிறார். ஷங்கரின் 2.0வில் வசனமெல்லாம் ஜெ.எம். உடையதுதான். வாசிப்பு மற்றும் படைப்பிலக்கியம் வழியாக கமல்ஹாசனுக்கும் ஜெயமோகனுக்கும் மிக நெருக்கமான பந்தமிருக்கிறது. அந்த வகையில் ஷங்கரின் இயக்கத்தில், கமல்ஹாசனின் நடிப்பில் உருவாக இருக்கும் இந்தியன் பார்ட் 2விலும் நிச்சயம் ஜெயமோகனின் எழுத்தாளுமை இருக்கும்.
இதற்கிடையில் இவரது புகழ் பெற்ற ‘யானை டாக்டர்’ சிறுகதையை இயக்குநர் ராஜூமுருகன் படமாக்க இருக்கிறார். 2.0வுக்கு அடுத்து முழுக்க முழுக்க அதில் தன்னை ஐக்கியப்படுத்த இருக்கிறார் ஜெ.எம்.
திரைப்பணியில் என்னதான் இருந்தாலும் தனக்கு முகவரி இட்டுத்தந்த புத்தக படைப்பை ஜெயமோகனால் விட்டு விலகிட முடியுமா?
‘வெண்முரசு’ எனும் வரலாற்று புனைகதை ஒன்றை ஐந்து ஆண்டுகளாக உருவேற்றி வருகிறார் இவர். இது பற்றி வாய் திறந்திருக்கும் ஜெயமோகன் “500 பாகுபலிக்கு சமம் இந்த வெண்முரசு நாவல். இந்நாவலைக் கொண்டு பாகுபலி போல் 100 திரைப்படங்களை எடுக்கலாம். அத்தனை வலுவான கதாபாத்திரங்கள் இதில் உள்ளன. படம் எடுக்க இயக்குநர்கள் முன் வந்தால் நான் திரைக்கதை எழுதிட தயார்.” என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்கிறார்.
வெண்முரசு எட்டு திக்கும் ஒலிக்கட்டும்!