திரையரங்குகளுக்கு 28 சதவிகிதம் விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியால் திரைப்பட கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக நடிகர் விஷால் கவலை தெரிவித்துள்ளார்.
ஜூலை 1-ந்தேதி முதல் மத்திய அரசு வரி சீர்திருத்தம் கொண்டு வர உள்ளது. நேரடி, மறைமுக வரிகளுக்கு மாற்றாக, ஜி.எஸ்.டி. என்ற ஒரே வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி விட்டது.
திரையரங்குகளுக்கு ஜி.எஸ்.டி. வரி 28 சதவிகிதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளது.
இந்நிலையில், நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
ஜி.எஸ்.டி வரியால் திரையரங்க கட்டணங்கள் உயரும் வாய்ப்பு உள்ளது. டிக்கெட் கட்டண பிரச்சனை குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்டண வசூலில் வெளிப்படை தன்மை தேவை என்பதை வலியுறுத்துவோம். வெளிப்படை தன்மை இருக்கும்போது கட்டணம் குறைய வாய்ப்புள்ளது.
அனைவரின் கருத்துகளை கேட்டுதான் முடிவுகள் எடுக்கபடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.