100-ஐக் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்.ஜி.ஆர்..!  

First Published Jan 17, 2018, 1:16 PM IST
Highlights
mgr 101 birthday celebration


இன்று எம்.ஜி.ஆரின் 101 ஆவது பிறந்தநாள். மக்கள் திலகம், புரட்சித்தலைவர் ஆகிய சிறப்புப் பெயர்களால் சினிமா உலகம் மட்டுமல்ல,  ஒட்டுமொத்த தமிழக மக்களாலும் அழைக்கப்பட்டவர்.

எம்.ஜி.ஆரின் மக்கள் தொண்டு அரசியல் உணர்வால் துவங்கப்பட்ட அதிமுக., தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. காமராசரால் கொண்டு வரப்பட்டு, எம்ஜிஆரால் நிறைவேற்றப்பட்ட சத்துணவுத் திட்டத்தால் மாணவ மாணவியர் பலர் பசி இன்றி, இன்று கல்வி பயின்று வருகின்றனர். 

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை வருடம்தோறும்... பலர் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு தெருவிலும் இன்று அவரது  புகைப்படம் வைத்து, மைக் செட் கட்டி, அவர் நடித்த சினிமாப் பாடல்களைப் போட்டு, அவருடைய பிறந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர்.  

வறுமையில் பிறந்து, வள்ளலாக உயர்ந்து, நடிகர், அரசியல்வாதி, மூன்று முறை முதல்வர் என பல்வேறு பரிமாணங்களை எடுத்த இவரின் புகழ் என்றும் அழியாதது.

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார்.  இந்தியாவின் தலைசிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். அவருடைய வாழ்க்கையில் நடிப்பும், அரசியலும் ஒரு முக்கியப் பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, நாடகக் குழுக்கள் பலவற்றில் பிரபலமாகத் திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகுந்த பற்றுடையவராக இருந்ததால், இளம்வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

எம்.ஜி.ராமச்சந்திரன், தனது சொந்தக் கட்சியாக, அ.தி.மு.கவை உருவாக்கினார். வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையை அனுபவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கியக் காரணம், அவர் ஏழைகளின் மீது வைத்த அன்பும் பரிவும்தான். அதனால்தான் அவர் ஏழைகளின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியைப் பிடித்த முதல் இந்தியத் திரையுலகப் பிரமுகர் என்ற பெருமையைப் பெற்றவர் எம்.ஜி.ராமச்சந்திரன்.

இளமைப்பருவத்திலேயே, நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் எம்.ஜி.ஆர். அவர் சிறுவனாக இருந்த போது, தந்தை காலமானார். அதனால், அவரது தந்தையின் மறைவுக்குப் பின், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பைத்தொடர முடியாமல், பணம் சம்பாதிக்கும் நிர்பந்தம் காரணமாக நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ஆர்., தமிழ்த் திரையுலகில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செலுத்தினார். 

1960ல், எம்.ஜி.ஆருக்கு மத்திய அரசு  ‘பத்மஸ்ரீ விருது’ அறிவித்தது. ஆனால், அரசின் மீதான  பற்றற்ற நடத்தையின் காரணமாக அந்த விருதை ஏற்க மறுத்துவிட்டார்.  அந்த விருதில் பாரம்பரிய ஹிந்தி சொற்களுக்குப் பதிலாக  தமிழில் அவை இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

‘ரிக்சாக்காரன்’ படத்தில் அவரது தேர்ந்த நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 1972ல்  பெற்றார் எம்.ஜி.ஆர்.

சென்னை மற்றும் உலக பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது.

தமிழகத்தில்  சமுதாய நன்மைக்காக அவரின் பங்களிப்பை மரியாதை செய்யும்  விதமாக அவர் மறைந்த பின்னர் 1988ல் ‘பாரத ரத்னா விருது’ வழங்கப்பட்டது.

என்னதான் விருதுகள் பெற்றாலும், இன்றும் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் எம்.ஜி.ஆர். 

அவரின் நூற்றாண்டு கடந்து 101 ஆவது பிறந்த நாள் இன்று வெகு சிறப்புடன் கொண்டாடப் படுகிறது.

click me!