பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் மீரா மிதுனை வரும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை பேச்சால் சோசியல் மீடியாவில் பிரபலமாகி வந்த மீரா மிதுன், பட்டியலின மக்களை அவதூறாக பேசி வெளியிட்ட வீடியோ தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மீரா மிதுனை கைது செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் குவிய ஆரம்பித்தன. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு கொடுத்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் போலீசில் ஆஜராகாமல் மீண்டும் தன்னுடைய திமிர் பேச்சை அவிழ்த்து விட்டு வீடியோ வெளியிட்டு தலைவரைவானார். இவரை கைது செய்ய தீவிரமாக போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கேரள மாநிலம் ஆழாப்புலாவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கைது செய்தனர். அவருடன் மீரா மிதுனின் ஆண் நண்பரான அபிஷேக் ஷாமும் கைது செய்யப்பட்டார்.
நேற்று சென்னை அழைத்து வரப்பட்ட மீரா மிதுன், காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் மீரா மிதுனை வரும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆன்லைனில் ஆபாசமாக பேசிய பப்ஜி மதன், அவதூறு பரப்பி வந்த கிஷோர் கே சாமி உள்ளிட்ட பலர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், மீரா மிதுன் மீது அப்படியான நடவடிக்கைகள் பாயும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.