’மகாமுனி’விமர்சனம்...உலகத்தரத்தில் ஒரு தமிழ் சினிமாவா இது?

By Muthurama LingamFirst Published Sep 5, 2019, 3:15 PM IST
Highlights

'மவுனகுரு’என்கிற அபாரமான படம் கொடுத்த, அடுத்த படம் கொடுக்க எட்டு வருட இடைவெளி எடுத்துக்கொண்ட இயக்குநர் சாந்தகுமாரின் இரண்டாவது படம் என்பதால் ‘மகா முனி’படத்துக்கு இண்டஸ்ட்ரி வட்டாரத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்ததென்னவோ உண்மை. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தாரா அவர்? முதலில் படத்தின் கதையைப் பார்ப்போம்.
 

'மவுனகுரு’என்கிற அபாரமான படம் கொடுத்த, அடுத்த படம் கொடுக்க எட்டு வருட இடைவெளி எடுத்துக்கொண்ட இயக்குநர் சாந்தகுமாரின் இரண்டாவது படம் என்பதால் ‘மகா முனி’படத்துக்கு இண்டஸ்ட்ரி வட்டாரத்தில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்ததென்னவோ உண்மை. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தாரா அவர்? முதலில் படத்தின் கதையைப் பார்ப்போம்.

சகோதரர்களான முனிராஜும் மகாதேவனும் சிறு வயதிலேயே பிரிந்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரின் வாழ்வும் ஒரு புள்ளியில் இணைந்து மகாமுனியாய் பரிமாணம் பெறுவதுதான் படத்தின் கதை.இயக்குநர் சாந்தகுமார், படம் தொடங்கியதுமே ஒரு கனமான சுமையை பார்வையாளர்கள் தலையில் இறக்கிவைத்துவிடுகிறார். படத்தின் இறுதிக் காட்சி வரை ஒருவித பதட்டத்துடனேயே பயணிக்கவேண்டிய நெருக்கடி தானாகவே வந்து சேர்ந்துவிடுகிறது.

ஒரு ஆர்யா மகா பிரபல அரசியல்வாதிக்கு கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டுக்கொடுப்பவர். இன்னொரு ஆர்யா முனிராஜ் மிகவும் சாது. பிரம்மச்சர்யத்தை கடைப்பிடிக்க விரும்பும் அவர் பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கிறார். அரிய புத்தகங்களுடன் கூடிய  ஒரு லைப்ரரி வைத்திருக்கிறார். இவர்கள் இருவரது வாழ்க்கையிலும் விதி எப்படியெல்லாம் வூடு கட்டி விளையாடுகிறது என்பதை அரசியல், சாதி வன்மம், திராவிட அரசியல், அடிதடி வெட்டுக்குத்து என்று பல சமாச்சாரங்களைக் கலந்து கட்டி தர முயற்சித்திருக்கிறார் சாந்தகுமார்.

ஆர்யாவுக்கு இது நான் கடவுளுக்கு அடுத்த மிக முக்கியமான படம் என்பதை மறுப்பதற்கில்லை. இரண்டு பாத்திரங்களையும் அட்டகாசப்படுத்தியிருக்கிறார். மகாவின் மனைவியாக வரும் இந்துஜாவின் நடிப்புதான் இப்படத்தின் ஆகச் சிறந்த அம்சம். அடுத்து புரட்சிப் பெண்ணாக வரும் மஹிமாவின் பிரச்சினைதான் திராவிட அரசியல் குறித்து அவர் டாகுமெண்டரி எடுக்கிறார். ஆர்யாவைப் பார்த்து அவ்வப்போது நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார். அப்பாவின் ஃபாரின் சரக்கை வழக்கமான சினிமாக்காரர்கள் மாதிரியே ராவாகக் குடிக்கிறார். அப்புறம் கதைக்குள் வந்த காரணம் எதையும் சொல்லாமல் காணாமல் போய்விடுகிறார்.

என்ன காரணத்தாலோ கடந்த ஒரு வார காலமாகவே இப்பட விளம்பரங்களில் உலக தரத்தில் ஒரு தமிழ் சினிமா என்று குறிப்பிடுகிறார்கள். உலகத்தரம் எதை வைத்து அளக்கப்படுகிறது என்று சொன்னால் கொஞ்சம் புரிந்துகொள்ள சவுகரியமாக இருக்கும்.உலகின் தரமான மொழியே தமிழ்தான் என்கிறபோது இன்னொரு உலகத்தரம் எதற்கு?

படத்தின் இன்னொரு ஆகச் சிறந்த அம்சம் அருண் பத்மநாபனின்  ஒளிப்பதிவு.தமனின் இசை சொல்லவொண்ணா இம்சை.

ராணுவ வீரன் செத்தா அவன் சடலத்துக்குக் கொடுக்கிற அதே மரியாதையை குழியில மலம் அள்ளுறவன் செத்தாலும் கொடுக்கணும்’...அரசியல்ல இருந்தா சம்பாதிக்கத்தெரியணும் கமிஷன் கரெக்டா வருதான்னு தெரிஞ்சுக்கணும்...ராமாயணத்தை எழுதினது சேக்கிழார்தானான்னு தெரிஞ்சுக்கவேண்டியதில்லை’என்று அங்கங்கே பல அதிர்ச்சிகளை இயக்குநர் அளிக்கத் தவறவில்லை. திரைக் கதை வடிப்பதிலும் அவரிடம் ஒரு அபார சாகச சக்தி இருக்கிறது. ஆனால் மவுன குருவில் ஒரு நேர்கோட்டில் பயணித்த அனுபவத்தை இப்படத்தில் அவர் தரத் தவறிவிட்டார். மகாமுனி மகாமுனிவர்கள் என்று தங்களை நினைத்துக்கொள்ளும் அறிவு ஜீவிகளுக்கு மட்டுமான படம்.

click me!