இதையடுத்து மற்றொரு கன்னட நடிகையான ஆண்ட்ரிதா ராய் மற்றும் அவர் கணவரும் பிரபல நடிகருமான திகாந்த் ஆகியோரிடம் இன்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கன்னட திரையுலகில் பகீர் கிளப்பியுள்ள போதைப்பொருள் விவகாரத்தில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் சின்னத்திரையைச் சேர்ந்த நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகியோர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கன்னட சினிமாவின் பிரபல நடிகையான ராகினி திவேதிக்கும் இந்த கும்பலுடன் தொடர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி பெங்களூரில் உள்ள ராகினி வீட்டில் மத்தியக்குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனையில் இறங்கினர். அதன் பின்னர் கைது செய்யப்பட்ட ராகினி பெங்களூருவில் உள்ள மகளிர் கைதிகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டார். தற்போது அவருக்கு 15 நாட்கள் வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் மேலும் பல திரையுலக முக்கிய புள்ளிகள் சிக்கலாம் என்ற தகவல் வெளியானது.
இதையடுத்து மற்றொரு கன்னட நடிகையான ஆண்ட்ரிதா ராய் மற்றும் அவர் கணவரும் பிரபல நடிகருமான திகாந்த் ஆகியோரிடம் இன்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பார்ட்டிகளுக்கு சென்றதை ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளனர். இந்த வழக்கில் மேலும் 2 கன்னட நடிகர்களுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். நடிகர்கள் அகுல் பாலாஜி, ஆர்யன் சந்தோஷ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்று ஆஜரானார்கள். இருவரும் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளனர். கன்னட பிக்பாஸிலும் கலந்துகொண்டவர்கள்.