எனது குழந்தைகள் பள்ளிச் சான்றிதழில் கூட தான் ஜாதிப் பெயரை தெரிவிக்கவில்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய நிலையில் நான் ஒரு அய்யங்கார் வீட்டு பெண் என்று அவரது மகள் ஸ்ருதி கூறியுள்ளது கமலுக்கு அவமானகரமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் நடிகர் கமல்ஹாசன் உரையாடினார். அப்போது ஜாதியை ஒழிக்க என்ன செய்யப் போகிறீர்கள்? பள்ளி மற்றும் கல்லூரிச்சான்றிதழ்களில் மட்டும் ஜாதியை தெரிவிக்க அனுமதிப்பீர்களா என்று பெண் ஒருவர் கமலை கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதில் அளித்த கமல், நிச்சயமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட ஜாதியை குறிப்பிடத் தேவையில்லை என்பது தான் தனது நிலைப்பாடு என்று தெரிவித்தார்.
இந்த பேட்டியை கையில் எடுத்துக் கொண்ட எதிர்ப்பாளர்கள் கமலுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். கமல் பள்ளிச் சான்றிதழ்களில் தனது மகளுக்கு ஜாதியை குறிப்பிடாமல் இருக்கலாம், ஆனால் அவரது மகள் மனதில் தான் ஒரு அய்யங்கார் என்கிற எண்ணம் மேலோங்கியுள்ளது என்று வசைபாடி வருகின்றனர். அப்படி என்றால் கமல் தனது மகள்களுக்கு ஜாதியை வெறுக்க கற்றுக் கொடுக்கவில்லையா? என்றும் கேள்வி முன்வைக்கப்படுகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்களில் ஜாதியை குறிப்பிடாமல் விட்டுவிடுவதன் மூலம் மட்டுமே ஜாதி ஒழிந்துவிடாது என்பது உங்கள் வீட்டில் இருக்கும் ஸ்ருதியே ஒரு உதாரணம் என்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் கமலை வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் ஸ்ருதியின் மனம் தான் ஒரு அய்யங்கார் என்பதோடு மட்டும் அல்லாமல் அய்யங்கார் என்றால் திறமையானவர்கள் என்கிற மனப்போக்கோடும் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனை பார்த்து சமூகவலைதளங்களில் பதில் அளிக்க முடியாமல் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திணறி வருகின்றனர். மேலும் ஸ்ருதி 2014ல் அளித்த பேட்டியால் அவரது தந்தை கமலுக்கு தற்போது அவமானகரமான சூழல் உருவாகியுள்ளதாக புலம்பத் தொடங்கியுள்ளனர்.