சென்னையில் ஐ.ஐ.டி., லயோலா, நியூ காலேஜ் உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை முதல் ஆளாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் சந்தித்தார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அசாமில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் தீயாய் பரவி வருகிறது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் தொடர்ந்து 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். எப்படியாவது போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் விடுதி மாணவர்கள் உடனே காலி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. "லீவு விட்டாலும், போராட்டத்தை கைவிட மாட்டோம்" என்ற மாணவர்கள் இரவில் கூட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் ஐ.ஐ.டி., லயோலா, நியூ காலேஜ் உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை முதல் ஆளாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் சந்தித்தார்.
பல்கலை கழகத்திற்குள் செல்ல கமல் ஹாசனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் பூட்டப்பட்ட பல்கலைக்கழக கேட்டின் முன்பு நின்றபடியே, மாணவர்களை சந்தித்த கமல் ஹாசன், போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். நம்மவரின் இந்த வருகை மாணவர்களின் இடையே உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.