அம்மான்னா சும்மாவாடா? ஆளாளுக்கு ஆசைப்படுறீங்க? கோலிவுட்டைப் பார்த்து பொங்கும் அ.தி.மு.க...

By sathish kFirst Published Sep 24, 2018, 11:57 AM IST
Highlights

கடந்த சில நாட்களாக இந்திய சினிமாவை ‘பயோகிராபி’ பைத்தியம் பிடித்து ஆட்ட துவங்கியுள்ளது. தமிழ், தெலுங்கில் பழைய சாவித்திரியின் வாழ்க்கை படமானது.

கடந்த சில நாட்களாக இந்திய சினிமாவை ‘பயோகிராபி’ பைத்தியம் பிடித்து ஆட்ட துவங்கியுள்ளது. தமிழ், தெலுங்கில் பழைய சாவித்திரியின் வாழ்க்கை படமானது. சஞ்சை தத்தின் வாழ்க்கை இந்தியில் படமானது. இவை இரண்டுக்குமே நல்ல வரவேற்பு கிட்டிய  நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறேன் பேர்வழி! என்று ஆளாளுக்கு தெறிக்க விடுவதால் ஆத்திரத்தின் உச்சிக்கே போயிருக்கின்றனர் அ.தி.மு.க.வினர் சிலர். 

ஜெயலலிதா இறந்ததுமே, அதிரடி இயக்குநர்  ராம்கோபால் வர்மா ’அம்மா’ எனும் டைட்டிலில் படம் இயக்கப்போகிறேன்!என்று ஒரு சலசலப்பை தட்டிவிட்டார். சர்ச்சை இயக்குநரான அவர் தன் படத்தில், ஜெயலலிதாவை சசிகலா ஸ்பாயில் செய்ததாக நிறைய காட்சிகள் வைக்க இருக்கிறார்! என்று தகவல்கள் வெளியாகின. 

இது சசி டீமை கடுப்பேற்றியது, சிலர் ராம்கோபால் வர்மா தரப்புக்கே போன் போட்டு ‘இந்த முயற்சி வேண்டாம்!’ என்றனர். கடுப்பாகிவிட்டார் அந்த மனிதர். ‘அம்மா- படம் நிச்சயம் வரும். ரம்யாகிருஷ்ணனைதான் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க வைக்க இருக்கிறோம். சசிகலா கேரக்டருக்கு அடாவடியான முகத்துடன் ஒரு ஆள் தேடிக் கொண்டிருக்கிறோம்.’ எனும் ரீதியில் தகவலை கிளப்பி கடுப்பேற்றியது ராம்கோபால் தரப்பு. ஆனால் ஏனோ அந்தப் படம் உருவாகவில்லை. 

இந்நிலையில், இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் ஏ.எல்.விஜய் இருவரும் தனித்தனியாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்போவதாக தகவல்கள் கிளம்பின. அதில் ஜெயலலிதா வேடத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க ஏ.எல்.விஜய் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் படபடத்தன. கீர்த்தி சுரேஷின் பெயரும் அடிபட்டது. பாரதிராஜாவோ, சினிமாத் துறைக்கு வெளியிலிருந்து ஒரு பெண்ணை தேடிக் கொண்டிருப்பதாக பரபரப்பின் டெம்போ எகிறியது. 

இப்படி ஆளாளுக்கு ஜெயலலிதாவின் கதையில் கைவைக்க முயற்சித்தது அ.தி.மு.க.வினரை கடும் டென்ஷனாக்கியது. ’படம் எடுக்குறேன்னு சொல்லி, இந்த கூட்டம் அம்மாவோட பெயரை கெடுக்காம அடங்காது போலிருக்கே. ஏதாச்சும் ஏடாகூடமா செஞ்சு வெச்சுட போறாங்க. பாரதிராஜா கருணாநிதியோட ஆளு. அதனால வேணும்னே அம்மா பேரை அசிங்கப்படுத்துற மாதிரி ஏதாச்சும் செய்வார். இதுக்கு அனுமதிக்க கூடாது.’ என்றும், ஜெயலலிதாவை பற்றி உருவாகும் படம் சர்ச்சை கோணத்தில் படமாக்கப்படுவது என்றால் அதை எப்படி தடுத்து நிறுத்தலாம்? என்றும் அ.தி.மு.க.வினர் தங்களுக்கு ஆதரவான சினிமா இயக்குநர்கள் தரப்பில் பேசி வைத்திருந்தனர். 

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் புதுமுக இயக்குநர் பிரியதர்ஷினி என்பவர், நடிகை நித்யா மேனனை வைத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக அறிவித்தே விட்டார். ‘ஐயன் லேடி’எனும் பெயரில் இந்தப்படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்த தகவலை கேள்விப்பட்டதும் ஏற்கனவே கடுப்பிலிருந்த அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் கடும் காட்டமாகிவிட்டனர். அ.தி.மு.க.வினர் சிலரின் அதிகாரப்பூர்வ வலைதளங்கள் சிலவற்றில் இதை கடுமையாக விமர்சிக்க துவங்கிவிட்டனர் ‘அம்மான்னா சும்மாவாடா? அவங்க வாழ்க்கையை படமாக்குறேன்னு ஆளாளுக்கு கிளம்பிட்டீங்க?’ என்று கொதித்துக் கொந்தளித்துள்ளனர். 
படம் வந்தால் என்னாகுமோ?

click me!