புதிய இயக்குநர்களும் பின்பற்றினால் ஆரோக்கியமாக இருக்காது... திரெளபதி இயக்குநர் எச்சரிக்கை..!

By Kanimozhi PannerselvamFirst Published Jan 10, 2020, 1:20 PM IST
Highlights

சாதியை முன்னிருத்தி படம் எடுப்பதையே வழக்கமாக செய்து வரும் சிலர் அதனை தடுக்காவிட்டால், புதிய இயக்குநர்களும் இதையே பின்பற்றினால் அது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமாக இருக்காது என திரெளபதி இயக்குநர் மோகன் ஜி எச்சரித்துள்ளார். 

"பழைய வண்ணாரப்பேட்டை" படத்தை இயக்கிய மோகன், கிரவுடு பண்ட் முறையில் "திரெளபதி" படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் அஜித் மைத்துனர் ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டிரெய்லர் பரபரப்பை கிளப்பியது. ட்ரெய்லரில் இடம் பெற்ற வசனங்களும், காட்சிகளும் மற்றொரு தரப்பினரின் நாடக காதலை தோலுரிக்கும் விதமாக இருப்பதாக கூறப்பட்டது. 

சாதிகள் உள்ளதடி பாப்பா, அடித்தால் திருப்பி அடி ஆகிய வாசகங்கள் உடன் போஸ்டர் வெளியான போதே "திரெளபதி" பரபரப்பை கிளப்பப்போவது உறுதி என முடிவானது.  இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. நாடக காதலுக்கு எதிரான காட்சிகளும், வசனங்களும் வெளிப்படையாக பயன்படுத்தப்பட்டுள்ளதால், சமூக வலைத்தளங்களில் பலத்த வரவேற்பையும், கடும் எதிர்ப்பையும் ஒருசேர பெற்றுள்ளது திரெளபதி. 

இதையடுத்து படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காவல் ஆணையர் அலுவலகம் வரை சென்று போர் கொடி தூக்கினர். ஒருபக்கம் ஃபேஸ்புக், டுவிட்டரில் சமூக போராளிகளின் கண்டனங்கள் குவிந்தன. தனது படத்திற்கு வந்த கடும் கண்டனங்களைப் பார்த்து கடுப்பான மோகன், திரெளபதியை ரிலீஸ் செய்யவிடாமல் தடுத்தால், யூ-டியூப்பில் வெளியிடுவேன் என்று அதிரடியாக அறிவித்தார். 

மோகனின் இந்த அறிவிப்பால் கலங்கிப்போன ஆதரவாளர்கள் யூ-டியூப்பில் வெளியிட்டாலும், அக்கவுண்ட் நெம்பர் மட்டும் கொடுங்க ஆளுக்கு 500, 1000 என நாங்க தர்றோம் என ஆதரவு காரம் நீட்டினர். எதிர்ப்புகளை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளேன் என்று கூறி வந்தார். இந்நிலையில் இனி தான் இதேபோன்ற படங்களை இயக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தர்பாரை தவிக்க விட்ட "திரெளபதி"... சாதியக் காதலை சாடுவதற்கு கூடும் ஆதரவு... இதுவே ஆதாரம்...!

’’தான் வாழ்ந்த பகுதிகளில் நடந்த உண்மை சம்பவங்களை கொண்டே "திரெளபதி" படத்தை எடுத்துள்ளேன். இனி வரும் காலங்களில் இதுபோன்ற படங்களை எடுக்க விருப்பவில்லை. சாதியை முன்னிருத்தி படம் எடுப்பதையே வழக்கமாக செய்து வரும் சிலர் அதனை தடுக்காவிட்டால், புதிய இயக்குநர்களும் இதையே பின்பற்றினால் அது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமாக இருக்காது’’ என அவர் எச்சரித்துள்ளார். 

click me!