தடைகளை தகர்த்த "தலைவி", "குயின்"... அதை மட்டும் கட்டாயம் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்...!

By Asianet TamilFirst Published Dec 12, 2019, 7:29 PM IST
Highlights

"குயின்" இணையதள தொடர் மற்றும் "தலைவி" படத்தை வெளியிட தடையில்லை என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் "தலைவி" திரைப்படத்தில் "இது கற்பனை கதை" என அறிவிப்பு வெளியிட உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து "தலைவி" என்ற படத்தை ஏ.எல். விஜய்யும், "குயின்" என்ற வெப் சீரிஸை கெளதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர். "தலைவி"யில் கங்கனா ரனாவத்தும், "குயின்" இணையதள தொடரில் ரம்யா கிருஷ்ணனும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தன் அனுமதி இல்லாமல் தலைவி, ஜெயா, குயின் ஆகியவற்றை தயாரிக்கவோ, விளம்பரப்படுத்தவோ, திரையிடவோ கூடாது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இன்றைய விசாரணையின் போது "குயின்" வெப் சீரிஸில் ஜெ.தீபா பற்றி எந்த காட்சிகளும் இடம் பெறவில்லை என கெளதம் வாசுதேவ் மேனன் தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். அதேபோல "தலைவி" படம், தலைவி என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டு வருவதாகவும், அப்புத்தகம் பல ஆண்டுகளாக புழகத்தில் உள்ள போதும் தடை ஏதும் கோரப்படவில்லை என்றும் ஏ.எல்.விஜய் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது 

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, "குயின்" இணையதள தொடர் மற்றும் "தலைவி" படத்தை வெளியிட தடையில்லை என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் "தலைவி" திரைப்படத்தில் "இது கற்பனை கதை" என அறிவிப்பு வெளியிட உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்தார்.

 

click me!