இந்நிலையில் "மாஸ்டர்" படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யக்கூடாது என பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான கேயார் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "மாஸ்டர்". இந்த படத்தின் ஷூட்டிங் அனைத்தும் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதனால் இருதரப்பு ரசிகர்களும் படத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கொரோனா பிரச்சனை மட்டும் இல்லை என்றால் "மாஸ்டர்" திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் "மாஸ்டர்" திரைப்படம் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி அன்று ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்தியா முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தியேட்டர்களை அதற்கு முன்பு திறக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. எனவே "மாஸ்டர்" படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் "மாஸ்டர்" படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யக்கூடாது என பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான கேயார் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உச்சகட்ட கவர்ச்சி... 39 வயதிலும் குட்டை உடையில் அட்ராசிட்டி செய்யும் கிரண்...!
அதில், 75 நாட்களாக மூடப்பட்டிருக்கும் தியேட்டர்களை திறக்க வேண்டுமென தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வரும் அதே நேரத்தில், முதல் நாளே விஜய்யின் மாஸ்டர் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்ட முதல் நாளே மாஸ்டர் படத்தை திரையிட்டால் அது விஜய்க்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் கெட்டப்பெயராக அமையும். வெளிநாட்டில் தற்போது அரபு நாடுகளில் மட்டுமே தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் 30 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தியாவிலும் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் நிச்சயமாக 100 சதவீதம் பார்வையாளர்களை அரசாங்கம் அனுமதிக்காது. குறைந்தது 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அப்படி இருக்கும்போது எல்லா வகையிலும் இந்தப் படத்திற்கான வசூல் பாதிக்கப்படும். அது மற்ற ஹீரோக்களின் வியாபாரத்தையும் பாதிக்கும். எனவே பல கோணங்களில் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதிக்கும் போது, 150 திரைகளுக்கு மிகாமல் ரிலீஸ் செய்யும் படங்களை மட்டுமே திரையிட அனுமதிக்க வேண்டும்.மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் அதிக படங்கள் வெளி வருவதற்கு வாய்ப்புகள் உருவாகும். அத்துடன் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் கட்டுப்படுத்தப்படுவதால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் வருமான இழப்பை சரி செய்ய மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் 26 சதவீத ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியை முழுமையாக மூன்று மாதங்களுக்கு ரத்து செய்து, கஷ்டத்திலும் நஷ்டத்திலும் இருக்கும் தமிழ் திரையுலகை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் சிறிய படங்களுக்கு வரப்போகும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது திரையரங்குகளுக்கு எளிதாக இருக்கும். ரசிகர்களுக்கும் விதிமுறைகளை பின்பற்றுவது பழக்கப்பட்டு விடும். அதன்பிறகு பெரிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும்போது அதிக ரசிகர்கள் வந்தாலும் தியேட்டர்காரர்களால் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை முறைப்படி அமல்படுத்த முடியும்.
ஒருவேளை தமிழக அரசு தியேட்டர்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது என்று நிபந்தனை விதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதைவிட தியேட்டர்கள் திறப்பதை தள்ளிப் போடுவதே சாலச்சிறந்தது. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள 90சதவீதம் திரையரங்குகள் குளிர்சாதன வசதி செய்யப்பட்டவை. அத்துடன் ஏசி வசதி இல்லாமல் இரண்டரை மணி நேரம் தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பது மிக கடினமான விஷயம்.
இதையும் படிங்க: நயன்தாரா - விக்னேஷ் சிவன் ரகசிய திருமணம்?... லாக்டவுனிலேயே கச்சிதமாக முடிக்க பரபரப்பு திட்டம்...!
எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், திரையரங்குகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போது, பொருளாதார சிக்கல்களை காட்டிலும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.