நான் உயிர் பிழைத்தேன் என்பதை விட வேதனை வாட்டி எடுக்கிறது..! 1 கோடியை அறிவித்து ஆதங்கப்படும் இயக்குனர் ஷங்கர்!

By manimegalai aFirst Published Feb 28, 2020, 12:09 PM IST
Highlights

கடந்த 19 ஆம் தேதி, 'இந்தியன் 2 ' இரவு நேர படப்பிடிப்பின் போது, கிரேன் கீழே சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், கிருஷ்ணன், சந்திரன், மற்றும் மது ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் படைத்தனர்.
 

கடந்த 19 ஆம் தேதி, 'இந்தியன் 2 ' இரவு நேர படப்பிடிப்பின் போது, கிரேன் கீழே சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், கிருஷ்ணன், சந்திரன், மற்றும் மது ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் படைத்தனர்.

நேற்று இந்த விபத்து குறித்து இந்தியன் 2 படத்தின் இயக்குனர் ஷங்கர் வேப்பேரியில் மத்திய குற்ற பிரிவு போலீசார் நடத்திய 3 மணிநேர விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, மிகவும் மன வருத்தத்தோடு... அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதில், இந்தியன் 2 விபத்தில் பலியான மூவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி அறிவித்துள்ளார். 

இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... " இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியில் இருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலில் இருந்தும், இன்னும் மீளவில்லை.  மீள முயன்று கொண்டிருக்கிறேன்.  ஒரு மாதம் முன்பு என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது. நல்ல உதவி இயக்குனர் அமைவது கடினம், இவ்வளவு பெரிய படத்தை சேர்ந்த சில நாட்களிலேயே தெரிந்து கொண்டு களமிறங்கி மிகச் சிறப்பாக பணியாற்றினார்.

 ஒரு சரியான உதவி இயக்குனர் அமைந்து விட்டார் என்கிற சந்தோஷம் நீடிக்காதது என் துரதிர்ஷ்டம்.  கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்றிருந்த போது, அவரின் தாயார் என்னிடம் கதறி அழுதது என் கண்ணுக்குள்ளேயே நின்று என்னை இம்சிக்கிறது.  

எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவைப்படும் போதெல்லாம்,டீ, காபி, தண்ணீர், பிஸ்கட்,  என்று எது கேட்டாலும் என் அருகிலேயே நின்று உடனுக்குடன் கொடுத்து உதவிய மதுவை பிணவறையில் பார்த்ததும் அதிர்த்துவிட்டேன்.  

ஆர்ட் டிபார்ட்மெண்ட்டை சேர்ந்த சந்திரன் செட்டில் ஒரு மாதம் வேலை இருக்கிறது, என்று விரும்பி வந்து வேலைக்கு சேர்ந்தார் என்று கேள்விப்பட்டபோது துக்கம் தாளவில்லை. எவ்வளவோ பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்தும், சற்றும் எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன்.

மயிரிழையில் நான் உயிர் பிழைத்தேன் என்ற உணர்வை விட அவர்கள் உயிர் இழந்து விட்டார்கள் என்ற வேதனை தான் என்னை வாட்டி எடுக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், அவர்கள் குடும்பத்தினர், அங்கு பணி புரிந்தவர்கள் என்று அந்த விபத்து சம்பந்தப்பட்ட அனைவரும் படும் துயரங்களையும் கஷ்டங்களையும் பார்க்கும்போது,  அந்த கிரேன் என் மேல் விழுந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது.

கிருஷ்ணாவின் குடும்பத்தினருக்கும், அவர் மனைவிக்கும் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும் மதுவின் குடும்பத்தினருக்கும் திரு.சந்திரன் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன உதவி செய்தாலும் இறந்த உயிர்க்கு ஈடாகாது. இருப்பினும், அவர்களின் குடும்பத்திற்கு ஏதோ ஒரு வகையில் சிறு உதவியாக இருக்கும் என்று எண்ணி ஒரு கோடி ரூபாய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் இந்த துயரத்திலிருந்து விரைவில் மீள வேண்டும் என்றும் மனப்பூர்வமாகப் பிரார்த்திக்கின்றேன் இவ்வாறு அந்த அறிக்கையில் இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்

click me!