ஒரு ஊரை எதிர்த்து குடும்பமே கபடி விளையாடும் திரைப்படம் 'பட்டத்து அரசன்'!

By manimegalai aFirst Published Nov 18, 2022, 11:56 PM IST
Highlights

இன்று 'பட்டத்து அரசன்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில், இந்த படம் உருவான விதம் குறித்து இயக்குனர் சற்குணம் கூறியுள்ள தகவல்கள் இதோ.. 
 

லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குனர் பி. சற்குணம் இயக்கத்தில் ராஜ்கிரண், அதர்வா முரளி இணைந்து நடித்துள்ள  திரைபடம் ''பட்டத்து அரசன் ''. இந்த படத்தில் நடிகை ராதிகா, நடிகர்கள் ஜெயபிரகாஷ் ஆர் கே சுரேஷ் சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லோகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

களவாணி, வாகை சூடவா, சண்டி வீரன் என ஹிட்டு படங்களை கொடுத்த சற்குணத்தின் அடுத்த படைப்பாக இந்த ''பட்டத்து அரசன்'' திரைப்படம் உருவாகியுள்ளது. சென்சார் செய்யப்பட்டு யு சான்றிதழ் பெற்றுள்ள இந்த திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் திரைப்படம் பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குனர் சற்குணம் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டம் ஆம்லாப்பட்டு என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா, அப்பா, பேரன், மாமன், மச்சான், என ஒரு குடும்பமே கபடி விளையாடுவது பற்றி கேள்விப்பட்டேன். அது என்னை பாதித்தது உடனே நேரடியாக சென்று அவர்களிடம் பேசி அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டேன். இருப்பினும் அவர்கள் சொன்ன விஷயம் ஒரு படம் எடுப்பதற்கு போதுமானதாக இருக்காது என்பதால் அதனுடன் என்னுடைய கற்பனை கதையை சேர்த்து திரைக்கதையை உருவாக்கினேன். 

அதேபோல் தஞ்சை பகுதியில் பிரபல கபடி வீரராக விளங்கியவர் பொத்தாரி. அவரைப் பற்றி அந்த பகுதியில் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த பெயரை இந்த பட்டத்து அரசன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான ராஜ்கிரண் கதாபாத்திரத்திற்கு பெயர் வைத்துள்ளேன். இதுகுறித்து ராஜ்கிரனிடம் கூறிய போது அவர் மகிழ்ச்சி அடைந்தார். அதேபோல் மற்ற வீரர்களின் பெயர்களும் தமிழகத்தில் கபடி விளையாட்டில் சிறந்து விளங்கியவர்களின் பெயரை வைக்குமாறு கூறினார். நானும் அப்படி வைத்தால் அது அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக அமையும் என நினைத்து எல்லா கதாபாத்திரங்களுக்கும் பிரபல கபடி விளையாட்டு வீரர்களின் பெயரையே சூட்டியுள்ளேன்.

இதன் கதைக்களம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் நடப்பது போன்று அமைத்துள்ளேன். அங்கு வெற்றிலை தோட்டம் வைத்துள்ள குடும்பம் தான்  ராஜ்கிரனின் குடும்பம். தார பங்கு என்ற விளக்கத்தின் அடிப்படையில் ராஜ்கிரனின் இரண்டு தாரங்களுக்கும் தனது சொத்தை சமமாக பிரித்துக் இதனால் முதல் தாரத்தின் மகனுக்கும் இரண்டாம் தாரத்தின் மகனுக்கும் விரோதம் ஏற்படுகிறது இதன் காரணமாக ஊர் பிரச்சனை ஏற்பட்டு ஒரு குடும்பம் ஊரை எதிர்த்து கபடி விளையாடும் விதைக்கு தள்ளப்படுகிறது இதுதான் அந்த படத்தின் மைய கரு. 

இதில் கபடி விளையாட்டு என்பது குடும்ப சண்டைகளுக்கிடையே ஒரு பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. முழுவதுமே கபடி விளையாட்டாக இருக்காது. இதில் காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் சேர்ந்து ஒரு கமர்சியல் பேக்காக வந்துள்ளது.  ராஜ்கிரண், அதர்வா கதாபாத்திரங்கள் சிறப்பாக உள்ளது. அவர்கள் இருவரும் மோதிக் கொள்ளும் காட்சிகள் படத்தின் திருப்புமுனையாக அமையும். மேலும் இந்த படத்தின் கதாநாயகியாக கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கும் ஆஷிகா ரங்கநாத் முதல் முறையாக தமிழில் விளக்கமான வந்து செல்லும் கதாநாயகி போல் இல்லாமல் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் ராதிகா ஆர் கே சுரேஷ் ஜெய் பிரகாஷ் ஆகியோருக்கும் அழுத்தமான காமெடி தனியாக இல்லாமல் கதைக்குள் சிங்கம்புலியின் காமெடி ரசிக்கும்படியாக இருக்கும்.

மேலும் இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலமாக உள்ளது. சூட்டிங் முடிந்த பிறகு ஜிப்ரான் இசை கோர்ப்பு பணிகளை மேற்கொண்டார். கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் எனக்கு சிறப்பான இசையை தர வேண்டும் என்ற காரணத்தினால் அந்த நேரத்தை எடுத்துக் கொண்டதாக கூறினார். பின்னணி இசை உடன் படத்தை பார்த்தபோது வேற லெவலில் இருந்தது எந்தவித கரக்சனும் நான் ஜிப்ரானிடம் சொல்லவில்லை. அதேபோல் வெற்றிலை தோட்டம் என்பது இதுவரை சினிமாவில் அவ்வளவாக காட்டப்படாத பேக்ட்ராப். அதை அழகாக தனது கேமராவில் லோகநாதன் படம் பிடித்துள்ளார். அதேபோல் லைக்கா நிறுவனம் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து தேவையான பட்ஜெட்டையும் கொடுத்து இந்த படத்தை ஒரு பிரமாண்ட படமாக உருவாக்கி தந்துள்ளனர். இந்த நேரத்தில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் சார் அவர்களுக்கும், தலைமை நிர்வாகி தமிழ் குமரன் சார் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பட்டத்து அரசன் திரைப்படம் அனைத்து பணிகளும் முடிந்து வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நீங்கள் அனைவரும் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து எனது முந்தைய படங்களுக்கு தந்த ஆதரவை இந்த படத்திலும் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

இந்த படத்தின் டிரைலரும் இன்று வெளியாகி நல்ல வரவேப்பை பெற்று வருகிறது... தற்போது வெளியாகியுள்ள டிரைலர் இதோ...

click me!