எஸ்.பி.பி-க்காக கூட்டு பிரார்த்தனை... ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்களுக்கு பாரதிராஜா அழைப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 19, 2020, 1:38 PM IST
Highlights

இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உயிர் நண்பரான பாரதிராஜா திரையுலகினருக்கும், மக்களுக்கும் உருக்கமான கோரிக்கையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 14ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைகிடமாக இருப்பதாகவும், அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. 

கடந்த சனிக்கிழமை முதல் மீண்டும் சீரான நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த எஸ்.பி.பி.யின் உடல்நிலை நேற்று மீண்டும் கவலைக்கிடமானது. அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகளுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது காந்த குரலால் வசீகரித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் நல்லபடியாக மீண்டு வர வேண்டுமென ஓட்டுமொத்த ரசிகர்களும் பிரார்த்தித்து வருகிறார். இந்நிலையில் எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று வெளியிட்ட வீடியோவில்,  அப்பா வென்டிலேட்டர் சப்போர்ட்டில் இல்லை என வதந்தி பரப்பப்படுகிறது. அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இருந்தது போலவே அவருடைய உடல் நிலை உள்ளது. எம்.ஜி.எம்.மருத்துவமனையில் அப்பாவின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. உங்களுடைய பிரார்த்தனைகள் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உதவுகிறது. அதனால் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள் என கோரிக்கைவிடுத்திருந்தார். 

இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உயிர் நண்பரான பாரதிராஜா திரையுலகினருக்கும், மக்களுக்கும் உருக்கமான கோரிக்கையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் இனிய தமிழ் மக்களே... இந்திய திரை உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக  தன் இனிமையான குரலால் மக்களை மகிழ்வித்தும், மொழிகளை வளமைப்படுத்திக் கொண்டும் ஒரு குயில் மூச்சுவிடாமல் இன்றும் நம்மைத் தாலாட்டிக் கொண்டு இருக்கிறது என்றால் அது 'பாடும் நிலா' எஸ்.பி.பி தான். தற்போது அவன் கொரோனா தாக்குதலுக்கு ஆட்பட்டு முடக்கப்பட்டுள்ளான் என்று நினைக்கும்போது கண்ணீர் மல்கிறது. அவன் நிலையைக் கண்டு திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், அனைத்து துறைக் கலைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் வேதனை அடைவதை பார்த்து நெஞ்சம் பதறுகிறது. 

அன்பை மட்டுமே விதைக்கத் தெரிந்தவன், பண்பாளன், மாபெரும் கலைஞன். அந்த கலைஞன் மீண்டு வரவேண்டும். நாம் மீட்டு வரவேண்டும். அதற்காக இயற்கை அன்னையை பிரார்த்திக்கும் வகையில் திரு.இளையராஜா,  திரு.ரஜினிகாந்த், திரு.கமல்ஹாசன், திரு.வைரமுத்து, திரு.ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனைத்து திரைப்பட நடிகர் நடிகைகள்,  தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள்,  பெப்சி அமைப்பினர், தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஊடக கலைஞர்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை (20-8-2020(வியாழக்கிழமை)) இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டுப் பிரார்த்தனைக்கு உலகமெங்கும் வாழும் மக்களை அன்புடன் அழைக்கிறேன்.

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் உடல்நலம் குன்றி வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்த போது, இந்த மாதிரி ஒரு கூட்டுப் பிரார்த்தனை செய்தோம். அவர் அதிலிருந்து மீண்டு தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தார். அதே போல் இந்தக் கூட்டுப் பிரார்த்தனை மூலம் குரலில் பொன்மனச் செம்மலான எஸ்.பி.பியை மீட்டெடுப்போம் வாருங்கள். இனம், மொழி, மதம் கடந்து ஒரு மகா கலைஞனை மீட்டெடுப்போம். அவன் குரல் காற்றில் மீண்டும் ஒலிக்க வேண்டும். ஒன்று கூடுவோம்.  பிரார்த்திப்போம்... என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

click me!