தனுஷ் – மாரி செல்வராஜ் இணையும் புதிய கூட்டணி…

By Selvanayagam PFirst Published Nov 13, 2018, 9:24 PM IST
Highlights

பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் திரைக்கு வரும் முன்பு பலமுறை கதை சொல்வதற்காக தனுஷை சந்திக்க முயன்றும் அவரது நிழலைக்கூட நெருங்க முடியவில்லை என மாரி செல்வராஜ் கூறியிருந்த நிலையில் தற்போது இந்த புதிய கூட்டணி கோலிவுட்டை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. கதிர், ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ரஜினி, கமல், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட அனைத்து தமிழ் திரையுலகினருமே இப்படத்தைக் பாராட்டினர். இப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். ஆனால், யார் நாயகன் உள்ளிட்ட விஷயங்கள் எதுவுமே தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டேன். அமர்க்களமாக இருக்கிறது. படத்தில் காட்டப்பட்ட யதார்த்தமும் வாழ்க்கைமுறையும் நாம் அங்கே இருப்பது போல் உள்ளது என தெரிவித்திருந்தார்..

மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து நான் நடிக்கவுள்ள படத்தை தாணு தயாரிக்கவுள்ளார். அவர் போன்ற திறமைசாலிகளுடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.

புதிதாக உருவாகியுள்ள இக்கூட்டணிக்கு, தமிழ் திரையுலகினர் பலரும் தங்களுடைய வாழ்த்துகளை சமூகவலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது தனது இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வரும் தனுஷ், அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.

click me!