காலண்டர் படத்தால் சிக்கலில் மாட்டிய ஜெய் பீம் ; அரசியல் பிரமுகர்களால் அடுத்தடுத்த சிக்கலை சந்திக்கும் சூர்யா ?

By manimegalai aFirst Published Nov 6, 2021, 3:44 PM IST
Highlights

எஸ் ஐ குருமூர்த்தி இல்ல காலண்டரில் இடம் பெற்றிருந்த தீச்சட்டி படத்திற்கு பதிலாக சாமி படத்தை ஜெய்பீம் படக்குழு மாற்றியுள்ளது. 

உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கும் படங்கள் பெரும்பாலும் சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் படத்தில் உண்மை சம்பவங்களோடு சில சித்தரிப்புகளும் இடம்பெற்றிருந்தது. விருதுகளை தட்டி சென்ற இந்த படம் ரிலீஸுக்கு பிறகு பல இக்கட்டுகளை சந்தித்தது.  இதில் வில்லனாக வரும் போலீஸ் அதிகாரி மேல் சாதியினர் போல காட்டப்பட்டிருந்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட வசனங்களும் பட்டியல் இனத்தவரை மிக மோசமாக விமசரிப்பதாகவே இருந்தது. அதோடு அந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த கட்சியின் கொடிகளும் போஸ்டர்களும் ஆங்காங்கே காட்டப்பட்டிருந்தது. இதனால் கடுப்பான அதிகாரம் மிக்கவர்களின்  வற்புறுத்தலுக்கு பிறகு இந்த காட்சிகள் நீக்கப்பட்டன.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் இருளர்களின் வாழ்க்கை இன்னல்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவ தழுவலாக இருந்தாலும் இதிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வசனத்திலும், வட்டார வழக்குகளிலும் கவனம் செலுத்தும் இயக்குனர்கள் வில்லன் கேரக்டரில் வசமாக சிக்கி கொள்கின்றனர்.  மாற்று மதத்தை பகைத்து கொள்ள கூடாது என எண்ணிய இயக்குனர் மாற்று சமூகத்திடம் இப்போது சிக்கி தவிக்கிறார். அவ்வாறு  வில்லன் குருமூர்த்தி வீட்டு காலண்டர் படத்தை யார் கவனிக்க போகிறார்கள் என எண்ணி இயக்குனர் செய்த தவறு இப்போது படத்திற்கே பேர் இடியாக வந்து நிற்கிறது. ஜெய் பீம் படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் போலீஸ் குரு மூர்த்தியின் வீட்டில் காட்டப்படும் காலண்டரில் அக்கினி கலசம் இடம் பெற்றிருக்கும். அதோடு சில இடங்களில் சமூக பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்நிலையில் படத்தை  உற்று நோக்கிய குறிப்பிட்ட சமூகத்தினர் தற்போது இயக்குனருக்கு செக் வைத்துள்ளனர். இதனால் இயக்குனர் ஞானவேல் ராஜா விழி பிதுங்கி நிற்கிறார்.

இந்த காட்சியமைப்பு குறித்து வன்னிய சமூகத்தினர் ஜெய் பீம் படகுழுவினருக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக ரீதியான வன்முறையாக திசை திருப்ப சிலர் முயல்வதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த சம்பவத்தை சமரசம் செய்ய எண்ணிய ஜெய் பீம் படக்குழு அக்கினி சட்டி படத்திற்கு பதிலாக சாமி படத்தை தற்போது மாற்றியமைத்துள்ளது. அதோடு சாதிய பெயர் இடம்பெறும் காட்சிகளை மாற்றவும் முயன்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்பாக நடிகர் சூர்யாவை சுயநலவாதி என கூறிய  பாஜக பிரமுகர் எச்.ராஜா;  நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம் என கடுமையாக விமரிசித்திருந்தார். இந்நிலையில் இன்று வன்னிய சமூகத்தினரின் எதிர்ப்பு படக்குழுவினருக்கு மேலும் தலை இடியாக வந்திறங்கியுள்ளது. இதற்கிடையே நடிகர் சூர்யா மீதான கடுப்பில் சில அரசியல் பிரமுகர்களின் செய்யும் சதி என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா நீட், மும்மொழி கொள்கை உள்ளிட்ட  அரசு திட்டங்களை கடுமையாக விமர்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!