Maanadu : மாநாட்டில் மோதல்.. சிம்பு நடித்த 'மாநாடு' பார்க்க வந்த இடத்தில் சண்டை போட்ட ரசிகர்கள்…

By Raghupati RFirst Published Nov 30, 2021, 8:27 AM IST
Highlights

கோவையில் மாநாடு வெளியான தியேட்டரில் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

கடந்த வாரம் நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில்,யுவன் சங்கர் ராஜா இசையில்,வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியானது “மாநாடு” திரைப்படம். தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ‘மாநாடு’ வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கோவை ரேஸ் கோர்சில் உள்ள கே.ஜி தியேட்டரில் மாநாடு படம் திரையிடப்பட்டுள்ளது. நேற்று இரவு காட்சியின் போது, ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கம் போல, படம் ஓடிக் கொண்டிருந்த போது ரசிகர்கள் கைதட்டியும், விசிலடித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். 

அப்போது தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த சிலர் எதற்கு இப்படி கூச்சல் போடுகிறீர்கள். மற்றவர்கள் படம் பார்க்க வேண்டாமா ? என்று சிலர் கேட்டுள்ளனர். அப்படிதான் கத்துவோம் என்று இவர்கள் கூற, இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.  இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் வெளியே ஓடிவந்தனர்.

இந்த தாக்குதலில் கெம்பட்டி காலனியைச் சேர்ந்த முகமது நிஷார் மற்றும் உக்கடம் ஜி.எம் நகரைச் சேர்ந்த கவுதம் ஆகியோர் காயம் அடைந்தனர். உடனடியாக ரேஸ் கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து காயமடைந்த 2 பேரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீதும் கலகம் செய்தல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் ஆகிய நான்கு பிரிவுகளில் பந்தய சாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஒரு தரப்பில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்,  மகேஸ்வரன், கௌதம், கதிரவன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மற்ற 7 பேரை தேடி வருகின்றனர். மற்றொரு தரப்பில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையின,ர் முகமது அசாருதீன், அப்துல்ரகுமான், முகமது அஸ்பர், முகமது சல்மான் ஷாநவாஸ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இரு தரப்பைச் சேர்ந்த 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மாநாடு படம் பார்க்க சென்ற இடத்தில், மோதலில் ஈடுபட்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!