ஆன்டி இண்டியனை திரையிடக்கூடாது... தியேட்டரில் பாஜக-வினர் ரகளை... போலீஸ் பாதுகாப்பு கேட்கும் ப்ளூ சட்டை மாறன்

By Ganesh PerumalFirst Published Dec 11, 2021, 8:34 PM IST
Highlights

தணிக்கை செய்யப்பட்டு வெளியான படத்தை திரையரங்குகளில் வெளியிடக்கூடாது என்று மிரட்டல் விடுப்பது கருத்து சுதந்திர ஜனநாயகத்திற்கு எதிரானது என ப்ளூ சட்டை மாறன் (Blue Sattai Maaran) தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்களை பாரபட்சம் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கிய ஆன்டி இண்டியன் (Anti Indian) திரைப்படம் டிசம்பர் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பார்வதி தியேட்டரில் நேற்று இரவுக்காட்சி நடந்த சமயத்தில் நுழைந்த பாஜக கட்சியை சேர்ந்த சுமார் பத்து பேர் 'இப்படம் இந்துக்களை இழிவுபடுத்துவதாலும், எங்கள் கட்சி கொள்கைக்கு எதிராக உள்ளதாலும் இப்படத்தை திரையிடக்கூடாது' என்று கோஷமிட்டனர்.

ஆகவே அக்காட்சி நிறுத்தப்பட்டு, படம் பார்க்க வந்த ரசிகர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் அங்கிருந்த ஆன்டி இண்டியன் பேனரை கீழே இறக்க வேண்டுமென மிரட்டல் விடுக்கவே.. அந்த பேனர் இறக்கி வைக்கப்பட்டது. மேலும் இப்படத்தை மறுநாளும் திரையிடக்கூடாது என்று எச்சரித்து விட்டு சென்றுள்ளனர். ஆகவே அடுத்த காட்சிகள் அங்கு திரையிடப்படவில்லை.

இதுகுறித்து ஆன்டி இண்டியன் (Anti Indian) படத்தின் இயக்குனர் ப்ளூ சட்டை மாறனிடம் கேட்டபோது, “உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தணிக்கை செய்யப்பட்டு வெளியான இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடக்கூடாது என்று மிரட்டல் விடுப்பது கருத்து சுதந்திர ஜனநாயகத்திற்கு எதிரானது. 

எனவே நாங்கள் இதுகுறித்து காவல்துறை உயரதிகாரியிடம் புகார் செய்துள்ளோம். மேலும் இப்படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டுள்ளோம்” என்று கூறினார்.

click me!