விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்றுள்ள கவினின் தாயார் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 ல் பங்கேற்ற வனிதா, தன்னுடைய மகளை கடத்திவிட்டதாக இரண்டாவது கணவர் கொடுத்த புகாரின் பெயரில் வனிதாவை கைது செய்ய போலிஸ் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது.
அடுத்து மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்ற மீரா மிதுனும் அடங்குவார். இவர் மோசடி வழக்கில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, சென்னை தி.நகரைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணிடம் ரூ.50,000 பணம் வாங்கியுள்ளார்.
ஆனால் அதனை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசில் அப்பெண் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வரும் 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் மீரா மிதுனைக் கைது செய்ய தேனாம்பேட்டை போலீசார் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்த பிக்பாஸ் புகழ் கவின் குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தமயந்தி இவருடைய மகள் ராஜலட்சுமி மற்றும் மருமகள் ராணி. இவர்களும் தமயந்தியின் கணவர் அருணகிரி மற்றும் மகன் சொர்ணராஜன் ஆகியோரும் அந்தப் பகுதியில் சீட்டு கம்பெனி ஒன்றை அனுமதி இல்லாமல் 1998-ம் ஆண்டு முதல் 2006 -ம் ஆண்டு வரை நடத்தி வந்துள்ளனர்.
இந்த சீட்டு கம்பெனியில் 34 நபர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர். இவர்கள் யாருக்கும் பணத்தை திருப்பி தரவில்லை எனவும் தங்களுடைய பணம் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை தங்களுக்கு பெற்று தர வேண்டும் எனவும் கடந்த 2007 -ம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம் சாட்டப்பட்ட சொர்ணராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இறந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தமயந்தி, ராணி மற்றும் ராஜலட்சுமி ஆகியோருக்கு மோசடி வழக்கில் 5 வருட சிறை தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் சீட்டு நிதியங்கள் சட்டத்தின்படி இரண்டு வருட சிறை தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து கவினின் தாயர் உள்ளிட்ட 3 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்