ஆந்திர அரசு 100% இருக்கைகளுக்கு தற்போது அனுமதி அளித்ததற்கு திரையரங்கு உரிமையாளர்கள் தங்களுடைய வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே சரிவர திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த 2 மாதமாக 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கி வருகிறது. இந்நிலையில், ஆந்திர அரசு 100% இருக்கைகளுக்கு தற்போது அனுமதி அளித்ததற்கு திரையரங்கு உரிமையாளர்கள் தங்களுடைய வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களாகவே மக்களை வாட்டி வதக்கி வரும் கொரோனா தொற்று தற்போது வரை முழுமையாக இந்தியாவை விட்டு அழியாவிட்டாலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் முயற்சியால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே மக்களின் பாதுகாப்பு கருதி, திரையரங்குகள், மால்கள் போன்றவை மூடப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதமாக மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உரிய கொரோனா பாதுகாப்புடன் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக தமிழகம், ஆந்திரா, கேரளா, போன்ற மாநிலங்களில் திரையரங்குகளுக்கு 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே இதுவரை மத்திய மாநில அரசுகள் அனுமதி கொடுத்திருந்தது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஜூன் மாதம் முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆயுத பூஜையை முன்னிட்டு தொடர்ந்து விடுமுறைகள் வருவதாலும் இந்த கோரிக்கை வைக்கப் பட்ட நிலையில், தற்போது இதை ஏற்றுக்கொண்டு ஆந்திர மாநிலத்தில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஆந்திர மாநில உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளனர்.