நடிகர் விவேக் வீட்டில் இரட்டை பெண்குழந்தைகள்..!

By Thiraviaraj RMFirst Published Dec 18, 2018, 11:41 AM IST
Highlights

சில ஆண்டுகளுக்கு முன் தனது மகனை இழந்த நகைச்சுவை நடிகர் விவேக் தனது வீட்டில் இரட்டைப் பெண் குழந்தைகளை ரகசியமாக வளர்த்து வருகிறார். 

சில ஆண்டுகளுக்கு முன் தனது மகனை இழந்த நகைச்சுவை நடிகர் விவேக் தனது வீட்டில் இரட்டைப் பெண் குழந்தைகளை ரகசியமாக வளர்த்து வருகிறார். 
 
தமிழ்த்திரையுலகில் சின்னக்கலைவாணர் எனக் கொண்ட்டாடப்படுபவர் விவேக். கருத்து கந்தசாமியாக தனது நகைச்சுவை மூலம் சமூகக் கருத்துக்களை எடுத்துரைப்பவர். சமூக செயற்பாட்டாளராகவும் அறியப்படுபவர். இவரது மனைவி அருட்செல்வி. இவர்களுக்கு இரண்டு பெண்கள். ஒரு மகன். மகள்களில் மூத்தவர் அமிர்ந்த நந்தினி, இரண்டாமவர் தேஜஸ்வனி. மூன்றாவதாகப் பிறந்தவர் மகன் பிரசன்னா. 

இசையின் மீது அதிக நாட்டம் கொண்ட பிரசன்னா லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் கீபோர்டு பிரிவில் பட்டம் பெற்றவர். ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த பிரசன்னா தனது 13-வது வயதில் கடந்த 2015-ம் ஆண்டு மூளைக்காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

ஒற்றை மகனை இழந்து விட்டு விவேக்கும், அவரது குடும்பத்தினரும் கடும் வேதனையில் தவித்து வந்தனர். இதனையடுத்து தீவிரமாக சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் விவேக். அவரது மகள்கள் தனியார் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அவரது வீட்டில் ஒன்றைரை வயதான இரட்டைப் பெண் குழந்தைகளை வளர்த்து வருகிறார் விவேக். அந்தப் பெண் குழந்தைகளை விவேக் மனைவி அருட்செல்வி மிகவும் சிரத்தையுடன் கவனித்து வருகிறார். அந்தக்குழந்தைகளுக்கு சிறு பிரச்னைகள் என்றாலும் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவம் பார்க்கிறார். அல்லது அந்த தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் தீபா, விவேக் வீட்டிற்கே சென்று சிகிச்சையளித்துவிட்டுத் திரும்புகிறார். 

சரி... விவேக் வீட்டில் வளரும் இரட்டை பெண்குழந்தைகள் யார்? மகன் பிரசன்னா இறந்த பிறகு தங்களுக்கு ஆண் வாரிசு வேண்டும் என்கிற காரணத்தால் இன்றைய மருத்துவ வசதிகளை வைத்து விவேக் தனது புதிய வாரிசை உருவாக்க முயன்றாரா? அல்லது தத்தெடுத்தார்களா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

தற்போது ஒன்றரை வயதாகும் அந்தக் குழந்தைகளை சில மாதங்களாகவே அருட்செல்வி கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார். இது குறித்து விவேக் தரப்பில் கேட்டால் பதிலே இல்லை. குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவரிடம் கேட்டால், ’’சிகிச்சையளிக்கப்படும் முறையையும், சிகிச்சையெடுத்துக் கொள்பவரின் விபரங்களையும் ஒரு மருத்துவராக வெளியில் சொல்லக்கூடாது’’ என மறுத்து விட்டார். 

விவேக்கிற்கு மிக நெருக்கமாக இருக்கும் நண்பர்கள், மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் வட்டத்திலும் விசாரித்தால், ‘’அட, அப்படியா..? இது புதுத்தகவலாக இருக்கிறதே...’’ என ஆச்சர்யம் கொள்கிறார்கள். பிரசன்னாவின் மறைவிற்கு பிறகு அவரது பெயரில் விவேக்கும் அவரது மூத்த மகள் அமிர்தநந்தினியும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ட்ரஸ்ட் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். அப்படி இந்த இரட்டைக் குழந்தைகளை ட்ரஸ்ட் மூலம் வளர்த்தெடுக்கிறார்கள் என்றால், அதனை வெளிப்படையாகக் கூறலாமே. இதில், ரகசியம் காக்கப்படவேண்டிய அவசியமென்ன? 

click me!