“கடவுள் உடை மாற்றுவதை காட்டுங்க”... சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சைபர் கிரைமில் புகார்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 10, 2020, 1:58 PM IST
Highlights

 நடிகர் விஜய் சேதுபதியின் குடும்பத்தினரை சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக விமர்சிப்பதாக கூறி அகில இந்திய விஜய் சேதுபதி தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் சென்னை சைபர் கிரைம் பிரிவில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்து கடவுள்கள் குளிப்பதை காட்டலாம் ஆடை மாற்றுவதை காட்டக்கூடாதா என சர்ச்சையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மகா சபை சார்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதனிடையே விஜய் சேதுபதியின் இந்த கருத்து சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் குடும்பத்தினரை சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக விமர்சிப்பதாக கூறி அகில இந்திய விஜய் சேதுபதி தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் சென்னை சைபர் கிரைம் பிரிவில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

ஜே. குமரன் ஆகிய நான், நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கத்தில் தலைமை செயலாளர் பொறுப்பில் இருக்கிறேன். நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் ஒரு ஆண்டுக்கு முன்- 17.03.2019 அன்று சன் டி.வி. தொலைக்காட்சியில் 'நம்ம ஊரு ஹீரோ' என்ற நிகழ்ச்சியில் மறைந்த கதாசிரியரும், நகைச்சுவை நடிகருமான திரு. கிரேசி மோகன் அவர்கள் ஒரு மேடையில் சொன்ன நகைச்சுவை துணுக்கை இந்த நிகழ்ச்சியில் மறுபதிவு செய்தார்.

இப்படி எதார்த்தமாக சொன்ன நகைச்சுவை துணுக்கு ஒன்றை சொன்ன பொருள் தன்மையில் இருந்து மாற்றி, இந்துக்களுக்கு எதிராக விஜய் சேதுபதி சொன்ன கருத்தாக திரித்து அந்த காணொளியை எடிட் செய்து குறிப்பிட்ட சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்த வதந்தியை தொடர்ந்து விஜய் சேதுபதியை எதிர்த்தும், ஆதரித்தும் வலைதளத்தில் ஒரு பெரும் சர்ச்சையே நிகழ்கிறது. இந்த சர்ச்சையில் தர்மத்தை பாதுகாக்கும் காவலர்களை போல் வாதிடுபவர்கள், தார்மீக தர்ம முறைகளை மீறி, விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தாரைப் பற்றி தரக்குறைவாகவும், தரம் தாழ்ந்தும் பதிவிடுகிறார்கள்.


இது விஜய் சேதுபதி அவர்களின் நற்பெயரை குலைப்பதோடு, தேவை இல்லாத வலைதள வாக்குவாதங்கள், சமுதாய நல்லிணக்கத்தையும் அமைதியையும் சீர்குலைக்கும் ஒரு தூண்டு கோலாக உருவாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுத்துகிறது. அறிவுசார் சமூகத்தில் வாழும் நாம், தனி மனித கருத்துக்கள் வேறுபட்டிருந்தாலும், ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும், தனி மனித மரியாதையை பாதிக்கும் விதமாக இருக்கக் கூடாது.

கருத்துச் சுதந்திரம் என்பது காழ்ப்புணர்ச்சியாகவும், காயப்படுத்தும் விதமாகவும் இருக்கக் கூடாது. அதனால், உடனடியாக விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரைப் பற்றிய தரக்குறைவான, அருவருக்கத்தக்க உள்ள பதிவுகளை அகற்றவும், இத்தகைய பதிவுகள் வராமல் தடுக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்படிப்பட்ட அவதூறுகளுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்த சர்ச்சைக்குரிய அந்த காணொளியும் நீக்கப்பட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
 

click me!