WEF 2022: கச்சா எண்ணெய் விலை உயர்வு செயற்கையாக உருவாக்கப்பட்டது: ஹர்திப் பூரி குற்றச்சாட்டு

By Pothy RajFirst Published May 25, 2022, 10:24 AM IST
Highlights

WEF 2022: davos 2022 : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டது. தற்போது நிலவும் பேரல் 110 டாலர் என்பதுகூட நீடித்திருக்காது என்று உலகப் பொருளதார மாநாட்டில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி குற்றம்சாட்டினார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டது. தற்போது நிலவும் பேரல் 110 டாலர் என்பதுகூட நீடித்திருக்காது என்று உலகப் பொருளதார மாநாட்டில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி குற்றம்சாட்டினார்.

ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இதில் மத்திய  பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி பங்கேற்றுள்ளார். அங்கு நேற்று நடந்த கூட்டத்தில் ஹர்திப் சிங் பூரி பேசியதாவது: 

உக்ரைன், ரஷ்யா இடையிலான போரின்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்ச கட்டத்தை அடைந்து பேரல் 140 டாலர இருந்தது. ஆனால், தற்போது பேரல் 110 டாலராக இருக்கிறது. இந்த விலைகூட நிலையானது அல்ல என்று நான் நம்புகிறேன்.

அதிகரித்துவரும் பணவீக்க விகிதம், வளரும் நாடுகள் பொருளாதார மீட்சியிலிருந்து வருவதை கடுமையாகப் பாதிக்கும். கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் ஆலோசிக்க வேண்டும். 

கச்சா எண்ணெய் பற்றாக்குறை, எரிபொருள் பற்றாக்குறையால் உலகம் தவிக்கிறது என்று யாரும் நம்பவேண்டாம். தேவைக்கு ஏற்றார்போல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் சப்ளை இல்லை, சப்ளையில் ஏற்பட்ட பாதிப்புதான். இதனால்  பணவீக்கமும் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சிக்கல் என்பது நிர்வாகரீதியான சிக்கல் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. உலகநாடுகளுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நாடுகள், தாங்கள் இருப்பு வைத்திருக்கும் கச்சா எண்ணெயை தேவையான அளவு சப்ளை செய்ய முடிவெடுத்தால் இந்த விலைஉயர்வு இருக்காது. கச்சா எண்ணெய் விலை உயர்வு செயற்கையாக உருவாக்கப்பட்டது.

இவ்வாறு ஹர்திப் பூரி தெரிவித்தார்

இந்தியா தனது எரிபொருள் தேவையில் 85 சதவீதத்தை அதாவது 85 சதவீத கச்சா எண்ணெயை இறக்குமதி மூலமே நிறைவு செய்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் சிறிய விலை மாற்றம்கூட பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

பெட்ரோல் , டீசல், சமையல் கேஸ் விலை உயர்த்தப்படும்போது, அது பணவீக்கத்தை தூண்டி, விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கிறது. உள்நாட்டு காரணிகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு சேர்ந்து கடந்த இரு மாதங்களாக நாட்டில் பணவீக்கம் உச்ச கட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!