share market fall today :வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் அதாள பாதாளத்தில் சரிந்ததற்கு 5 முக்கியக் காரணங்கள் உள்ளன.
வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் அதாள பாதாளத்தில் சரிந்ததற்கு 5 முக்கியக் காரணங்கள் உள்ளன.
அமெரிக்காவில் மே மாதம் பணவீக்கம் எதிர்பார்த்த அளவான 8.3 சதவீதத்தைவிட அதிகரித்து 8.6 சதவீதாக உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை கடுமையாக உயர்த்தும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 75 புள்ளிகள் உயர்த்தலாம் எனத் தெரிகிறது.
இதனால் இன்று காலைபங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கியதால், நிப்டியியும், மும்பைப் பங்குச்சந்தையிலும் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது. மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1500 புள்ளிகள் சரிந்து, 52,801 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 422 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 15,799 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
இந்தியப் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்ததற்கு 5 முக்கியக் காரணங்களை சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
அமெரிக்க பணவீக்கம்
அமரிக்காவில் பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மே மாதத்தில் 8.06 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பெடரல் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவைவிட அதிகமாகும். இந்த பணவீக்க உயர்வால் அமெரிக்கப் பங்குச்சந்தையே சரிந்துள்ளது.
பெடரல் வங்கி வட்டு உயர்வு:
அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் பணவீக்கம் உயர்ந்துள்ளது. இதனால் இதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பெடரல்ரிசர்வ் வங்கி வரும் நாட்களில் வட்டிவீதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய 50 முதல் 75 புள்ளிகள் வரை வட்டி வீதம் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துவதால், இந்தியச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெற்று வெளியேறுவது அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய் விலையில் கடந்த சில நாட்களாகவே கடும் ஊசலாட்டம் நிலவுகிறது. பேரல் ஒன்று 122 டாலர் வரை சென்றது. பின்னர் 2 டாலர் குறைந்தது. சீனாவில் மீண்டும் லாக்டவுன் அதிகரிக்கும் என்ற செய்தியால் கச்சா எண்ணெய் விலை சரிந்து 118 டாலர்வரை குறைந்தது.
இந்தியப் பணவீக்கம்:
இந்தியாவில் பணவீக்கம் கடந்த ஜனவரி முதல் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 7.79 ஆகஅதிகரித்தது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தியுள்ளது. கடந்த மே மாதத்தில் 40 புள்ளிகள் வட்டியை உயர்த்திய ரிசர்வ் வங்கி ஜூன் மாதத்தில் 50 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவுக்கும்மேல் பணவீக்கம் இருப்பதால், இனிமேலும் வட்டிவீதம் உயரும் என்று முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது
இந்திய ரூபாய் மதிப்பு சரிவு
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ.78.15 ஆக இன்று காலை சரிந்து. அந்நிய முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்து முதலீட்டை திரும்பப் பெற்றுவருதால் டாலரின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்புக்கு நெருக்கடி ஏற்பட்டு சரிந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் ரூ.30.60 கோடி டாலர் குறைந்துள்ளதும் முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. அந்நிய முதலீட்டாளர்கள் கடந்த வாரத்தில் மட்டும் ரூ.14 ஆயிரம் கோடியும், 2022ம் ஆண்டில் ரூ.1.81 லட்சம் கோடி முதலீட்டையும் திரும்பப் பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.