Share Market Today: வரலாற்று உச்சத்தில் பங்குச்சந்தை! நிப்டி, சென்செக்ஸ் புதிய சாதனை! உலோகப் பங்கு ஜோர்

By Pothy RajFirst Published Nov 29, 2022, 3:56 PM IST
Highlights

மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் மீண்டும் வரலாற்று உச்சத்தைத் தொட்டு தொடர்ந்து 5-வது நாளாக ஏற்றத்துடன் இன்று வர்த்தகத்தை முடித்தன.

மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குச்சந்தையும் மீண்டும் வரலாற்று உச்சத்தைத் தொட்டு தொடர்ந்து 5-வது நாளாக ஏற்றத்துடன் இன்று வர்த்தகத்தை முடித்தன.

சென்செக்ஸ், நிப்டி, வர்த்தகத்தின் இடையே புதிய உச்சத்தைத் தொட்டு பின்னர் சரிந்தன. உலோகப் பங்குகள், எப்எம்சிஜி பங்குகள் ஆர்வத்துடன் வாங்கப்பட்டதால், சந்தையில் உயர்வு சாத்தியமானது.

பங்குச்சந்தை உயர்வுக்கு காரணமாக 3 அம்சங்கள் பார்க்கப்படுகின்றன. அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் நாளை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் வட்டிவீதம் பெரியஅளவு உயர்த்தப்படாது என்ற தகவல் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதிகமான அளவில் நவம்பரில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதும் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 

டாலர் குறியீடு சரிந்து, கடந்த சில நாட்களாக ரூபாய் மதிப்பு வலுத்துவருவதும் சாதகமான அம்சமாகும். இது தவிர கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற கருத்தும் முதலீட்டாளர்களை நம்பிக்கையுடன் நகர வைத்துள்ளது.

வர்த்தகம் தொடங்கியது முதல் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் நகர்ந்தந. வர்த்தகத்தின் இடையே, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 300 புள்ளிகள்வரை உயர்ந்து, பின்னர் குறைந்தது.

மாலை வர்த்தகம் முடிவில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 177 புள்ளிகள் உயர்ந்து, 62,681 புள்ளிகளில் ஏற்றத்துடன் முடிந்தது. வர்த்தகத்தின் இடையே புதிய உச்சமாக, 62,877 புள்ளிகள்வரை உயர்ந்து புதிய சாதனையைப் படைத்தது. 

தேசியப் பங்குச்சந்தையில் நிப்டியும் புதிய சாதனை  படைத்து,  55 புள்ளிகள் அதிகரித்து, புதிய உச்சமாக 18,618 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. வர்த்தகத்தின் இடையே 16,647 புள்ளிகள் வரை உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில், 14 பங்குகள் உயர்வுடன் முடிந்தன, மற்ற 16 நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன. குறிப்பாக இந்துஸ்தான்யுனிலீவர் 4 சதவீதமும், சன்பார்மா 1.5% லாபம் ஈட்டின.

நிப்டியில் இந்துஸ்தான் யுனிலீவர், ஜேஎஸ்டபிள்யு, ஹீரோ மோட்டார்கார்ப்பரேஷன், சிப்லா, பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் பங்குகள் லாபத்தை அடைந்தன. இன்டஸ்இன்ட் வங்கி, கோல் இந்தியா, பஜாஜ்பின்சர்வ், மாருதி சுஸூகி, பவர்கிரிட் ஆகிய பங்குகள் சரிந்தன.

click me!