
நிதிஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்து வெற்றிகரமாகச் செயல்படுத்திய ஸ்வச் பாரத் திட்டத்துக்கு மூலமாக இருந்து அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதும் பரமேஸ்வரன் ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த அமிதாப் காந்த் கடந்த 2016ம் ஆண்டு, பிப்ரவரி 17ம் தேதி பதவி ஏற்றார். அவரின் பதவிக்காலம் கடந்த 20ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து, புதிய சிஇஓவாக பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “ நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் அடுத்த 2 ஆண்டுகளுக்கோஅல்லது மறு உத்தரவு வரும்வரை நீடிப்பார்” எனத் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச கேடரில் 1981ம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்வானவர் பரமேஸ்வரன் ஐயர். பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான ஸ்வச் பாரத் திட்டத்தை கடந்த 2016 முதல் 2020ம் ஆண்டுவரை செயல்படுத்திக் காட்டியவர் பரமேஸ்வரன் ஐயர்.
2009ம் ஆண்டில் பரமேஸ்வரன் ஐயர் விஆர்எஸ் கொடுத்து ஓய்வு பெற்றார். அதன்பின், ஐக்கிய நாடுகள் சபையின் கிராமங்களுக்கான சுகாதார சிறப்பு மூத்த வல்லுநராக பரமேஸ்வரன் ஐயர் செயல்பட்டார்.
6 ஆண்டுகள் நிதி ஆயோக் சிஇஓவாக இருந்து பதவியலிருந்து செல்லும் அமிதாப் காந்த், டிஜிட்டல்இந்தியா, தேசிய மானிடைசேஷன் பைப்லைன், முதலீட்டு விலக்கல், மாவட்டங்களுக்கான திட்டமிடல், மொபைலிட்டி மற்றும் பேட்டரிகளுக்கான தேசிய அளவிலான மாற்றுத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தக் காரணமாக இருந்தவர்.
1980ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அமிதாப் காந்த், இன்கிரெடபிள் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, காட்ஸ் ஓன் கன்ட்ரி ஆகிய திட்டங்களை தயாரிக்க மூலக்காரணமாக இருந்தவர்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.